போக்குவரத்துக்கு உதவும் டாப்ளர் விளைவு
ரயில் நம்மை நோக்கி வரும்போது, அதன் ஹார்ன் ஒலியின் வலிமை கூடுவதையும், நம்மைவிட்டு விலகிச் செல்லும்போது வலிமை இழப்பதையும் கவனித்திருப்பீர்கள்? ஆஸ்திரிய அறிவியலாளர் கிறிஸ்டியன் டாப்ளர் (Christian Doppler) இது ஏன் இப்படி நடக்கிறது என்பதை ஊகித்து, 1842ஆம் ஆண்டில் ஒரு கோட்பாட்டை முன்வைத்தார். அந்தக் கோட்பாடு, டாப்ளர் விளைவு (Doppler effect டாப்ளர் எஃபெக்ட்) என்று அவர் பெயராலேயே இன்றும் அழைக்கப்படுகிறது. டாப்ளர் விளைவின் விளக்கம் இதுதான்: ஒலி, ஒளி உட்பட அனைத்து மின்காந்த அலைகளின் (Electromagnetic waves எலக்டிரோமேக்நெட்டிக் வேவ்ஸ்) அதிர்வெண்களும் (Frequencyஃபிரிகுயன்சி), நாம் உணரும் திசையைப் பொறுத்து மாறும். நம்மை நெருங்குகையில் அலை நீளங்கள் (Wave length வேவ் லெந்த்) குறையும், அதிர்வெண்கள் கூடும். விலகுகையில் அலைநீளங்கள் நீண்டு, அதிர்வெண்கள் குறையும். இதைப் புரிந்துகொள்ள ஒரு உதாரணம்: நீங்கள் ஒரே இடத்தில் நிற்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். உங்கள் நண்பர், ஒரு கூடையில் இருந்து பந்துகளை எடுத்து ஒவ்வொன்றாய் உங்களை நோக்கி வீசிக்கொண்டே, உங்களை நோக்கி நடந்து வருகிறார். ஒரு நிமிடத்தில் எத்தனை பந்துகள், எவ்வளவு வேகத்தில் வந்து சேர்கின்றன என்பதைக் கவனியுங்கள். பிறகு, அதே வேகத்தில் உங்களிடமிருந்து விலகி, பின்னோக்கி நடந்துகொண்டே பந்துகளை அதே வலிமையுடன் எறியச் சொல்லுங்கள். முன்பைவிட குறைவான எண்ணிக்கையில், வேகத்தில் பந்துகள் வந்து சேரும் அல்லவா? இதுதான் டாப்ளர் விளைவு! போக்குவரத்து காவல்துறையினர், வாகனங்களின் வேகத்தை கண்காணிக்கும் கையடக்க ரேடார் (Radar), டாப்ளர் விளைவின் அடிப்படையில்தான் செயல்படுகிறது. •வேகமாய் செல்லும் வாகனத்தைக் குறிபார்த்து, கருவியை நீட்டி பொத்தானை காவலர்கள் அழுத்துவார்கள். •அப்போது அந்தக் கருவி வெளிப்படுத்தும் குறிப்பிட்ட அதிர்வெண் கொண்ட அலைகளில் சில, அந்த வாகனத்தில் பட்டு, பிரதிபலித்து, கருவியிடம் திரும்பும். •இப்பொழுது வந்தடைந்த அலைகளின் அதிர்வெண்ணை கருவி கணக்கிடும். •திரும்பப் பெற்ற அலைகளின் அதிர்வெண், அனுப்பிய அலைகளின் அளவைவிட அதிகரித்திருந்தால், வாகனம் வேகமாகப் பயணிக்கிறது என்று கொள்ள வேண்டும்.•அதிர்வெண் முன்பைவிட எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதை அளவிட்டு, வாகனம் எவ்வளவு வேகத்தில் பயணிக்கிறது என்பதைக் கணிப்பார்கள். பிறகென்ன? அளவுக்கு மீறி சீறிப்பாய்ந்த வாகன ஓட்டிக்கு, அபராதம் விதிக்கப்படும்! அறிவியல் அடிப்படையில்!-ராமசாமி