உள்ளூர் செய்திகள்

பூமியின் நுரையீரலில் தீ!

நம்முடைய பூமிக்கு 20 சதவீத ஆக்சிஜன் அமேசான் காடுகளில் இருந்துதான் கிடைக்கிறது தெரியுமா? நாம் சுவாசிக்க, அமேசான் காடு உயிரோடு இருக்க வேண்டும். அதனால்தான், எங்கோ அமேசான் மழைக்காட்டில் எரியும் தீ, உலக மக்களுக்கு அச்சுறுத்தலைக் கொடுக்கிறது. ஆகவேதான் இதை பூமியின் நுரையீரல் என்று கூறுகின்றனர். தற்போது இந்த நுரையீரலில்தான் வரலாறு காணாத காட்டுத்தீ பற்றியுள்ளது.அமேசான் காடுகளில் காடழிப்பு பணி, வேகமாய் நடந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் மாதங்களில் வானில் ஏற்படும் மின்னல்வெட்டால் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம். மேலும், மரங்களை வெட்டுவதாலும், விவசாயத்திற்காக காடுகளை அழிப்பவர்களாலும் காட்டில் செயற்கையாக தீ வைக்கப்படுவதாக பிரேசில் விண்வெளி ஆய்வு மையம் கூறுகிறது. ஒரே ஆண்டில் 72 ஆயிரம் காட்டுத்தீ சம்பவங்கள் நடந்துள்ளன. அமேசான் மழைக்காடுகளில் வழக்கத்தைவிட மிக அதிக அளவில் காட்டுத்தீ பரவியுள்ளதாக இந்த ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தின் நிலைப்பாடு? பருவநிலை மாற்றம் என்பதே பொய் என்கிறது பிரேசில் அரசு. அவர்கள், வளர்ச்சித் திட்டங்களுக்காக காடுகளை அழித்து, விவசாய நிலங்களாக மாற்றி பணப்பயிர்கள் நடவு செய்து வருகின்றனர். ஆகஸ்ட் 2017 முதல் ஜூலை 2018 வரை மட்டும், சுமார் 7,900 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இயற்கையாக காடுகளில் தீ ஏற்படும்போது, இயற்கையே அதற்கான வழியையும் வைத்திருக்கும். ஆனால், மனிதர்களால் ஏற்படும் விபத்துகளுக்கு மனிதர்களிடமே பதில் இருப்பதில்லை. சமூகவலைத் தளங்களில் அமேசானை காப்பாற்றுகள் என்று பலரும் பதிவு செய்கிறார்கள். இப்போதைக்கு நாமும் அதைத்தான் சொல்ல வேண்டும். அமேசான் மீண்டு(ம்) எழட்டும்! கேள்விகுறியாகும் பழங்குடியினரின் வாழ்க்கை!அமேசான் காடுகளில் பழங்குடி மக்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு காடுகள்தான் வீடு. காடுகளை வளமாக்கும் செயல்களில் ஈடுபடுவார்களே தவிர, ஒருபோதும் காடுகளை அழிப்பதில் அவர்கள் துணைப்போக மாட்டார்கள். இந்தக் காட்டுத்தீயால் மற்றவர்கள் எவ்வளவு பாதிக்கப் படுகிறார்களோ அதைவிட பன்மடங்கு இவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இவர்களுடைய வாழ்வாதாரமே அமேசான் காடுகளை நம்பித்தான் இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !