அமெரிக்கா விசா கிடைச்சாச்சு!
'பதில் சொல் - அமெரிக்கா செல்' போட்டியில் வெற்றிபெற்ற போளச்சேரி, மகரிஷி வித்யாமந்திர் பள்ளியைச் சேர்ந்த ஹரீஷ் மற்றும் லக்ஷ்னா ஆகிய இருவருக்கும் அமெரிக்கா செல்வதற்கான விசா கிடைத்துள்ளது. வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை, இம்மாணவர்கள் அமெரிக்காவில் கல்விச் சுற்றுலா செல்லவிருக்கிறார்கள். பட்டம் மாணவர் பதிப்பின் சார்பில் சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி 'பதில் சொல் - அமெரிக்கா செல்' வினா - விடை போட்டி நடந்தது. வெற்றி பெறுபவர்கள், அமெரிக்காவின் நாசாவிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்பதுதான் இப்போட்டியின் சிறப்பு அம்சம். 106 பள்ளிகள் இப்போட்டியில் பங்கேற்றன. பிரபல குவிஸ் மாஸ்டர் சுமந்த் சி.ராமன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அவருடைய வழக்கமான பாணியில் கேள்விகளைக் கேட்டு கலகலப்பாக நிகழ்ச்சியை நடத்தினார். கேள்விகளைப் பயமின்றிச் சந்தித்த மாணவர்கள் சுவாரசியமாகப் பதில்சொல்லி அசத்தினர். முதற்கட்டமாக, எழுத்துத் தேர்வு நடந்தது. அதில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற முதல் எட்டு அணிகள் இறுதிக் கட்டத்திற்கு தேர்வாகினர். எழுத்துத் தேர்வில் போட்டி அதிகம். இறுதிப்போட்டி சுலபமாகவா இருக்கும்? சுமந்த், 360 டிகிரியில் வளைத்து வளைத்து கேள்விகள் கேட்டார். கணிதம், அறிவியல், புவியியல், தொழில்நுட்பம், விளையாட்டு, பொதுஅறிவு என, அனைத்து துறைகளிலும் கேள்விகள் அமைந்திருந்தன. நாசாவிற்கு யார் செல்வார்கள்? என்ற பதற்றம் பார்வையாளர்களிடம் தொற்றிக்கொண்டது. இறுதிப்போட்டியில் மிகச்சிறப்பாக பதில்களைச் சொன்ன போளச்சேரி, மகரிஷி வித்யாமந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் முதலிடத்தைத் தட்டிச்சென்று அமெரிக்கா செல்லும் வாய்ப்பைப் பெற்றனர்.