தேர்தல்கள் நடக்கவில்லை என்றால்?
ஐந்து ஆண்டுகளே பதவிக்காலம் கொண்டுள்ளவை உள்ளாட்சிப் பதவிகள் என்பதால், பணிக்காலம் முடிந்ததும் அவற்றின் நிலை என்ன? அரசாங்க அதிகாரிகள், இருக்கும் வேலைப்பளுவைத் தாண்டி, இவற்றையும் சுமக்கவேண்டிய சிரமநிலையும் ஏற்படும். ஊராட்சித் தலைவர், செயலாளர், பொருளாளர், உறுப்பினர் என, எத்தனை எத்தனையோ பொறுப்புகளுக்குரிய பணிகள் சரிவர நிறைவேறாமலும், மக்களின் மனுக்கள் நிராகரிக்கப்படுவதும்தான் நடக்கும்.இவற்றைவிடவும் பெரிய தீமை, மாநிலம் முழுவதற்கும் மத்திய அரசிடமிருந்து வரும் நிதி வராமலே போவதும், வரும் நிதியும், உள்ளாட்சி அமைப்பின் நிர்வாகிகள் இல்லாததால், சேர வேண்டியவர்களைச் சேராமல் இருப்பதும்தான். உதாரணமாக, தமிழகத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். ஐந்தாண்டுகளுக்குரிய ஏறக்குறைய 1.22 லட்சம் கோடி ரூபாய்கள் மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டு, ஆனால், செலவழிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பது சோகம். இது மட்டுமா? குடிநீர்ப் பற்றாக்குறை, கழிவுநீர் மேலாண்மை, ஊரக வளர்ச்சித் திட்டங்கள், நீர்ப்பாசனம், மராமத்துப் பணிகள், தூர்வாருதல், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் என, எத்தனை எத்தனையோ நலத்திட்டங்களும், மக்களுக்கான சேவைகளும் சரிவர நடக்காமல், அல்லது அரைகுறையாக நிகழ்கின்றன. இதனால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம்.