உள்ளூர் செய்திகள்

பாரதம் போற்றும் பஞ்சாப் சிங்கம்

லாலா லஜ்பத் ராய்28.1.1865 - 17.11.1928மோகா, பஞ்சாப் (பிரிட்டிஷ் இந்தியா)6ஆம் வகுப்புப் படிக்கும் போதே கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டார். குடும்ப வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்கவும் தந்தை அனுமதிக்கவில்லை. எல்லாவற்றையும் மீறி சட்டம் பயின்றார். நாட்டு விடுதலைக்காக வாழ்வை அர்ப்பணித்தார். எழுத்தாலும் பேச்சாலும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மக்களை அணிதிரட்டினார். நாட்டில் சுதேசி இயக்கத்தை வீறுகொண்டு எழச் செய்த பெருமைக்குரியவர் 'பஞ்சாப் சிங்கம்' லாலா லஜ்பத் ராய்!படிக்கும் காலத்தில் இருந்தே அரசியல் ஈடுபாடு அதிகம். அதனால், தீண்டாமையை அகற்றும் ஆரிய சமாஜப் பணிகளில் தயானந்த சரஸ்வதி மூலம், தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தயானந்த சரஸ்வதியின் நினைவாகப் பல பள்ளிகளைத் தோற்றுவித்து, தேசியக் கல்வியைப் போதித்தார். பல வெளிநாட்டுப் பள்ளிக்கூடங்களையும், பல்கலைக்கழகங்களையும் கண்டு, இந்தியக் கல்விமுறைகளை மாற்றியமைத்தார். இவர் உருவாக்கிய கல்விக்கூடங்களில் நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் கற்பிக்கப்பட்டன. தன் வருமானத்தையும் கல்வி வளர்ச்சிக்குக் கொடுத்து பஞ்சாப் மாநிலக் கல்வி நிர்வாகக் குழுவில் துணைத் தலைவராகவும் செயலாளராகவும் பணியாற்றினார். மாணவர்களுக்குக் கட்டணமின்றிக் கல்வியைக் கற்பிக்க வேண்டுமென்பதே இவரது கொள்கை.விடுதலைப் போரில் களமிறங்கிய லால், வாரணாசி காங்கிரஸ் மாநாட்டில் ஆற்றிய உரைக்குப்பின் நாடறிந்த தலைவர் ஆனார். காந்தியின் வருகைக்கு முன் இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்திய லால், பால கங்காதர திலகர், விபின் சந்திரபால் ஆகியோரை இணைத்து லால் - பால் - பால் என மக்கள் அன்புடன் அழைத்தனர்.இந்திய அரசியலமைப்புச் சட்ட சீர்திருத்தத்துக்கான சைமன் குழுவில் இந்தியர் யாரும் இடம்பெறாதது நாடு முழுவதும் எதிப்பை எழுப்பியது. இதனால், 1928ஆம் ஆண்டு சைமன் கமிஷனை எதிர்த்து நடைபெற்ற காங்கிரஸ் போராட்டத்தில் லால் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். கல்விப் பணியையும் சமூகப் பணியையும் இரு கண்களாகக் கொண்டு, இந்திய விடுதலைக்கும் சமுதாய நல்வாழ்வுக்கும் பாடுபட்ட லாலா லஜ்பத் ராய், இந்திய வரலாற்றின் அழியாப் பொக்கிஷம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !