கடலுக்கு அடியில் பூ
பார்ப்பதற்கு பூவைப் போலவே இருக்கும் கடல் தாமரை, ஒரு கடல்வாழ் மிதவை உயிரினம். அழகிய வண்ணத்தில் அசையும் பூக்களைப் போலத் தோற்றமளிக்கும். கடல்வாழ் உயிரினங்களான பவளம், ஜெல்லி மீன் வகையைச் சேர்ந்தது. இது ஒரு குழியுடல் உயிரி. அழகிய ஆரத்துடன் வட்ட வடிவத்தில் காணப்படும். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன. கடலுக்கு அடியில் ஓரிடத்தில் வாழ்பவை. கால்களே இல்லை என்றாலும், தங்களுக்கு ஆபத்து வரும்போது, நீரில் மிதந்து வேறு இடத்திற்கு நகர்ந்து சென்று அமர்ந்து கொள்ளும். ஊனுண்ணியான இவை, கடலில் வாழும் சிறு உயிரினங்கள், மிதவைப் பூச்சிகள் ஆகியவற்றை உண்கின்றன. தனது வண்ணமயமான குழாய் போன்ற இதழ்களால் இரையைக் கவர்ந்து அவற்றை விழுங்கி விடுகின்றன. உடலின் நடுப்பகுதியில் உள்ள வயிற்றுடன் இந்த குழாய்ப் பகுதி இணைந்திருக்கும். வாய்ப்புறத்தில் மட்டுமின்றி உடலின் எல்லா பகுதிகளிலும் நுண்ணிய துளைகளும், உணர்விழைகளும் இருக்கும். பூச்சிகளைப் பிடித்ததும், ஒரு திரவத்தை இதன் உடல் சுரக்கிறது. அந்தத் திரவத்தின் உதவியுடன் இரையை உடலின் நடுப்பகுதியில் உள்ள வயிற்றுப் பகுதிக்கு இரையைத் தள்ளுகின்றன. இரைகளைப் பிடிக்க, இதன் உடல் அமைப்பில் உள்ள 'ஸ்டிங் செல்ஸ்' (Sting Cells) என்ற பகுதி உதவுகிறது.பாசி, கடல் பஞ்சு, இறால், நண்டு, சிறு மீன்கள் போன்றவை கடல் தாமரைகளுக்குள் சென்று பதுங்கிக் கொள்ளும். மஞ்சள், இளஞ்சிவப்பு, பச்சை, வெள்ளை, பழுப்பு என, பல நிறங்களில் கடல் தாமரைகள் காணப்படும். 'துறவி நண்டு' (Hermit Crab - ஹெர்மிட் கிராப்) என்ற கடல் வாழ் உயிரினங்கள், இவற்றின் உடலுக்கு அடிப்பகுதியில் ஒட்டிக் கொள்கின்றன. அவற்றுடன் இணைந்து இவை இங்குமங்குமாக அசைந்து நகர்கின்றன. இவற்றின் உடலில் ஆண், பெண் உடலமைப்பு ஒன்றாக அமையப்பெற்றிருக்கும். கடலுக்கு அடியில் பத்தாயிரம் அடி ஆழம் உள்ள பகுதிகளில் இவை அதிகம் காணப்படுகின்றன. உலகம் முழுவதும் உள்ள கடல்களில் இந்த உயிரினங்கள் பரவலாக உள்ளன. 'கடல் சாமந்தி' என்ற வேறு பெயரும் இதற்கு உண்டு. விசைப் படகுகள், மீன் வலைகள் போன்றவற்றில் சிக்கி இவை அழிந்து வருகின்றன. - அ.ஆனந்தி