தெருவிலிருந்து சர்வதேச கிரிக்கெட்...
இந்திய கிரிக்கெட் அணியில் நுழைவது பலரின் கனவு. அப்படி, கிரிக்கெட் மீதான தீராத காதலுடன், மும்பைக்கு வந்து தெருக்களில் படுத்துறங்கிய சிறுவன் யஷாஸ்வி ஜெய்ஸ்வால். விடா முயற்சியாலும், அயராத உழைப்பாலும் தனது கனவை மெய்ப்படுத்தியிருக்கிறார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகி, பலகோடி இளைஞர்களின் முன்னுதாரணமாக ஆகியிருக்கிறார். உ.பி. மாநிலம் பதோகி பகுதியைச் சேர்ந்த யஷாஸ்வி ஜெய்ஸ்வால், 11 வயதில் மும்பைக்கு வந்தார். போதிய வருமானம் இன்றி, பட்டினியுடன், தெருவோரத்தில் பல இரவுகளைக் கழித்த அனுபவம் அவருக்குண்டு. 'நான் முதலில் ஒரு பால்பண்ணையில் தங்கியிருந்தேன். பகலில் கிரிக்கெட் ஆடிவிட்டு, இரவு அங்கு போவேன். களைப்பில் தூங்கிவிடுவேன். இதனால், ஆத்திரமடைந்த முதலாளி, பெட்டி படுக்கையைத் தூக்கி வெளியே வீசிவிட்டார். அதன் பின், பானிப்பூரி விற்றும், பழங்கள் விற்றும் உணவுத்தேவையை ஈடுகட்டினேன். ஆசாத் மைதானத்தில் இருந்த கூடாரத்திலேயே தங்கிக்கொண்டேன்.' என்கிறார் யஷாஸ்வி. தான் கஷ்டப்படுவது தந்தைக்குத் தெரிந்தால், ஊருக்கே வரச்சொல்லிவிடுவார்; கிரிக்கெட் கனவு கலைந்துவிடும் என்று பயந்து, யஷாஸ்வி எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. '2013இல் ஒருநாள், ஆசாத் கிரவுண்டுக்குப் போனேன். துடிப்பான ஒரு சிறுவன் நன்றாகப் பேட்டிங் செய்தான். அனுபவமிக்க பந்துவீச்சாளர்களையும் சிறப்பாக எதிர்கொண்டான். யஷாஸ்வி ஜெய்ஸ்வால் ஆடியதைப் பார்த்தவுடன் நம்பிக்கை வந்தது. அவன் வறுமையையும் மீறி, திறமையுடன் விளையாடியது என்னை ஆச்சரியப்படுத்தியது' என்கிறார் அவனுடைய கிரிக்கெட் பயிற்சியாளர் ஜிவாலா சிங். யஷாஸ்விக்கு முறையான கிரிக்கெட் பயிற்சி கொடுக்க ஜிவாலா சிங் முன்வந்தார். 'போதிய ஊட்டச்சத்தில்லாமல் யஷாஸ்வி பலவீனமாக இருந்தான். நல்ல உணவைக் கொடுத்துத் தேற்றினோம். ஜெய்ஸ்வாலின் பயிற்சிக்காகப் பல மணிநேரங்களைச் செலவிட்டோம். தற்போது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியிருக்கிறான்.' என்று பூரிக்கிறார் ஜிவாலா.'எந்தப் பணியை எடுத்தாலும், அதிலேயே முழுக்கவனத்தையும் செலுத்துகிறான். தன்னுடைய பின்புலத்தைச் சொல்லிக்காட்டி அனுதாபம் தேட முயற்சிப்பதில்லை. இத்தகைய பண்புகள்தான், இவனை இவ்வளவு தூரம் உயர்த்தியிருக்கிறது. ஜெய்ஸ்வால் ஆயிரத்தில் ஒருவன்' என்று சொல்லி புன்னகைக்கிறார் சமந்த், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்.மாடுகள் பராமரிப்பு, பானிப்பூரி விற்பனை என்று பல சிரமங்களை எதிர்கொண்ட ஜெய்ஸ்வால், இலங்கையில் நடைபெறும் ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக, சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுனுடன் ஒரே விமானத்தில் பயணிக்க உள்ளார். ஆம், தற்போது இருவரும் ஒரே அணி வீரர்கள்.