கணிதப் பாடம் கடினப் பாடமா?
கணிதப் பாடம்தான் மாணவர்களுக்குக் கடினமாக இருக்கிறது என்று பெற்றோர் கருதுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கியூமேத் என்ற தனியார் நிறுவனம், நாடு முழுவதும் சுமார் ஆயிரம் பெற்றோரிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில், 89 சதவீத பெற்றோர், 'தங்கள் பிள்ளைகளுக்கு கணிதப் பாடம் கடினமாக இருப்பதாகத்' தெரிவித்துள்ளனர். 71 சதவீத பெற்றோர், 'பள்ளிகளில் கணிதப் பாடத்தைச் சரியாகக் கற்பிப்பதில்லை. அதனால்தான் அப்பாடம் கடினமாக இருக்கிறது. எனவே, தனியே டியூஷனுக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்படுவதாகக்' கூறியுள்ளனர். 'தங்கள் பிள்ளைகள் கணிதத் தேர்வுக்கு முன்பே பதற்றமடைந்துவிடுவதாக,' 61 சதவீத பெற்றோர் தெரிவித்துள்ளனர். 'கணிதத்துக்கு அடுத்தபடியாக அறிவியல் பாடத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதாக,' 81 சதவீதப் பெற்றோர் கூறியுள்ளனர்.