உள்ளூர் செய்திகள்

அதிசய கொதிநீர் ஊற்றுகள்

அமெரிக்காவின் வயோமிங் மாகாணத்தில் 9,000 சதுர கி.மீ. பரப்பளவில் ஒரு மாபெரும் சரணாலயம் இருக்கிறது. யெல்லோஸ்டோன் தேசிய பூங்கா (Yellowstone National Park) என்று அதற்குப் பெயர்.பிரமாண்டமான ஆறுகளையும், பாறைக்குடைவுகளையும் (Canyons), காடுகளையும் உள்ளடக்கிய பகுதி இது. நூற்றுக்கணக்கான விலங்கினங்களுக்கு வாழ்விடமாகத் திகழ்கிறது. உலகின் முதல் தேசியப் பூங்கா இதுதான். அதைவிட விசேஷம், இந்தப் பூங்கா பூமிக்கடியில் இருக்கும் ஒரு மாபெரும் எரிமலையின் வாய்ப்பகுதியில் அமைந்து இருப்பது. சூப்பர் வல்கனோ (Super Volcano) என்று இந்த எரிமலையைச் சொல்கிறார்கள்.சுமார் 6 லட்சம் வருடங்களுக்கு முன்னர்வரை இந்த எரிமலை வெடித்திருக்கிறது. இப்போதுகூட இந்தப் பூங்காவின் பெரும்பகுதி நிலத்துக்கு அடியில் புதைந்திருக்கிறது. இதன் நிலப்பரப்பிலிருந்து 5-10 கி.மீ. ஆழத்தில் பாறைகள் உருகிய நிலையில் இருக்கின்றன.இந்தப் பூங்காக்கள் கெய்சர் (Geyser) எனப்படும் வெந்நீர் ஊற்றுகளுக்குப் பெயர் போனவை. சுமார் 250 வெந்நீர் ஊற்றுகள் இங்கு இருக்கின்றன. இவை அனைத்தும் குறிப்பிட்ட கால இடைவேளையில், கொதிநீரைப் பீய்ச்சி அடித்து, நீராவியை வெளியேற்றுகின்றன. சில ஊற்றுகள் ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை 3ல் இருந்து 20 நிமிடங்கள் வரை தொடர்ச்சியாகக் கொதிநீரைப் பீய்ச்சி அடிக்கின்றன. திகிலான சப்தத்துடன் தரையில் இருந்து 15மீ. முதல் 80மீ. உயரத்திற்குக் கொதிநீர் கிளம்புமாம்.ஊற்றுகள் தொடர்ச்சியாகத்தானே நீரை உமிழும்! ஆனால், இந்த ஊற்றுகள் ஏன் இடைவேளை விட்டு விட்டுத் தண்ணீரை வெளியேற்றுகின்றன என்ற கேள்வி எழும்.பூமிக்கடியில் எரிமலைகள் இருக்கும் இடங்களில், நிலத்தடி நீரானது மிகுதியான அழுத்தம் காரணமாக, கொதிநிலையை அடையும் முன்பாகவே அதிகம் சூடாகிவிடும். கொதிநிலையைத் தொட்ட உடன், சட்டென்று நீராவியாகி மேல் நோக்கிச் சீறும். அப்படிச் சீறும்போது கீழே இருக்கும் கொதிநீரைப் பீய்ச்சி அடித்துக்கொண்டு வெளியேறும்.ஒரு சில நிமிடங்கள் இப்படி நீராவியும் கொதிநீரும் வெளியேறும். அதே நேரத்தில் நிலத்தடி நீரூற்றுப் பாதையில் குளிர்ந்த நீர் வந்து சேரும். சிறிது நேரத்தில் அந்த நீரும் கொதிநிலையை அடைந்து, நீராவியாகி வெந்நீரை வெளியே தள்ளும். இப்படியே இந்தச் சுழற்சி குறிப்பிட்ட இடைவேளையில் தொடர்வதால், கொதிநீர் ஊற்றுகள் குறிப்பிட்ட இடைவேளையில் நீரைப் பீய்ச்சி அடிக்கின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கொதிநீர் உயரே பீய்ச்சி அடிக்கும் காட்சி, பார்ப்பதற்கு மேஜிக் ஷோ மாதிரி இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !