நைட்டி அணியத் தடை ஆந்திரத்தில் வினோதம்
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தோகாலப்பல்லி (Thokalapalli) கிராமத்தில், பகலில் பெண்கள் நைட்டி அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே நைட்டி அணிய வேண்டும் எனவும், நைட்டியுடன் வீதிக்கு வரக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் பெண்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய செய்தியை உள்ளூர் தொலைக்காட்சி அங்கே ஒளிபரப்ப, விஷயம் காட்டுத்தீ போல பரவி, பரபரப்பானது. சமூக வலைத்தளங்களில் கிராம நிர்வாகத்தின் இச்செயலுக்குக் கடுமையான விமரிசனங்கள் எழுந்துள்ளன. மாவட்ட நிர்வாகம் தாசில்தாரை அனுப்பி, இவ்விவகாரம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டுள்ளது.