பென் நர்சிங் விருது பெறும் முதல் இந்தியப்பெண்
அமெரிக்காவில் இயங்கிவரும் பென் நர்சிங் ரென்ஃபீல்ட் அறக்கட்டளை வருடந்தோறும் மருத்துவத் துறையில் சேவையாற்றி வருபவர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறது. விருதுடன் 63 லட்ச ரூபாய் ரொக்கமும் பரிசாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது தமிழகத்தைச் சேர்ந்த வந்தனா கோபிகுமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவரும் வைஷ்ணவி ஜெயக்குமாரும் இணைந்து 'பான்யன்' என்ற தொண்டு நிறுவனத்தை 25 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இதன்மூலம் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பல்வேறு வகையிலான உதவிகளையும் செய்துவருகின்றனர். இப்பணியைப் பாராட்டியே இந்த விருது இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் விருதுவழங்கும் விழா நடைபெற உள்ளது. வந்தனாவிற்கு பல தரப்பிலிருந்தும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்தவண்ணம் உள்ளன.