தமிழ்ச்சாரல்: போர்க்களத்தில் பறவைகள்
ஒரு போர்க்களக் காட்சியைப் பார்க்கலாமா?சங்க காலம் அது. துளு நாட்டு மன்னன் நன்னன், சேர அரசுக்கு உரிய புன்னாடு, பூழி ஆகிய பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டார். இதனால் கோபம் கொண்ட சேர அரசர் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், தன் படைத்தலைவன் ஆய் எயினன் தலைமையில், பெரும்படையை அனுப்பினார். ஆய் எயினன் குறுநில மன்னர், வள்ளல் தன்மை மிக்கவர்.நன்னன், வீரத்தில் மிகுந்த தன் தளபதி மிஞிலியிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். போர் பாழிப்பறந்தலை என்னும் இடத்தில் நடைபெற்றது. இருபெரும் வீரர்கள் மோதிக்கொண்டாலும், கடைசியில் மிஞிலிக்கே வெற்றி கிடைத்தது. போரில் ஆய் எயினன் வீரமரணமடைந்தார். பகல் பொழுதில் நடந்த அந்தச் சண்டையில் மார்பில் அம்பு பட்டு சாய்ந்து கிடந்தார் ஆய் எயினன்.படைத்தலைவன் இறந்ததும், படைகள் கலைந்தன. சிறிது நேரத்தில் வானில் பறவைகள் வட்டமிட்டுப் பறந்தன. அவை இறந்த உடல்களுக்காகத் தேடிவந்த கழுகுகள் அல்ல. ஆய் எயினன் கருணையில், தானியங்கள் உண்டு வளர்ந்த பறவைகள்.'தங்களை வளர்த்த தலைவன், தரையில் அம்பு பட்டு வீழ்ந்து கிடக்கிறான். கருணையே இல்லாமல் சூரியன், தன் கதிர்களை வீசிச் சுட்டெரிக்கிறான்' என்று நினைத்த பறவைகள், எயினன் உடலுக்கு நேர் மேலாகப் பறந்து, தங்கள் சிறகுகளால் நிழல் அமைத்து, நன்றி செலுத்தின அல்லது பறவைகள் மொழியில் கதறி அழுதன என்று கூடச் சொல்லலாம்.ஒரு பாடல் அல்ல, நான்கு அகநானூற்றுப் பாடல்களில் இந்த வரலாற்றுத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. எயினன் பறவைகளின் மீது, எந்த அளவிற்கு அன்பு கொண்டிருந்தார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.ஐந்தறிவு ஜீவன்களுக்குச் சிந்திக்கத் தெரியாதுதான். ஆனால் தங்களின் மீது அன்பு செலுத்தியவர்களுக்கு ஒரு துன்பம் என்றால், அதை அவை புரிந்து கொள்கின்றன.சான்று பாடல்கள்:1. கடும்பரிக்குதிரை ஆய் எயினன்நெடுந்தேர் மிஞிலியோடு பொருதுகளம் பட்டன' (அகம்: 148)2. ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்றுஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு (அகம்: 181)3. அளி இயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலைஇழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு (அகம்: 208)4. ஆஅய் எயினன் இகலடு கற்பின் மிஞிலியொடு தாக்கித்தன்னுயிர் கொடுத்தனன். (அகம்: 396)