பெருமைக்குரிய தலைவர்!
கே.ஆர்.நாராயணன்27.10.1920 -- 9.11.2005கோட்டயம், கேரளம்.கே.ஆர்.நாராயணனுக்கு முன்பிருந்த குடியரசுத் தலைவர்கள் யாரும் தேர்தலில் வாக்களித்ததில்லை. அந்த வழக்கத்தை மாற்றி, 1998 மக்களவைத் தேர்தலில் வரிசையில் நின்று, குடியரசுத் தலைவராக இருந்து வாக்களித்து ஜனநாயகக் கடமையை ஆற்றிய பெருமை, 'கொச்சேரில் ராமன் நாராயணன்' என்ற கே.ஆர். நாராயணனையே சேரும்! பள்ளிப் படிப்புக்குப் பிறகு கேரள பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்தார். இதழியல் படித்து இருந்ததால், ஆங்கில நாளிதழில் பத்திரிகையாளராக வேலை பார்த்தார். கல்லூரி விரிவுரையாளராகவும் இருந்தார். கல்வி உதவித்தொகை பெற்று லண்டன் சென்று, பொருளாதாரக் கல்விக் கழகத்தில் அரசியல் அறிவியல் படித்தார். அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கோரிக்கையை ஏற்று நாடு திரும்பி, இந்திய வெளியுறவுத்துறை பணியில் சேர்ந்தார். பணியைச் சிறப்பாகச் செய்து நேருவின் பாராட்டையும் பெற்றார். பணிகளில் இருந்து ஓய்வுபெற்று, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆனார். இந்திரா காந்தியின் வேண்டுகோளை ஏற்று, 1984இல் அரசியலுக்கு வந்து தொடர்ந்து 3 முறை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய திட்டத்துறை, வெளியுறவுத்துறை, தொழில்நுட்பத்துறை அமைச்சர் பதவிகளை வகித்தார். ராஜீவ் காந்தி அமைச்சரவையில் மத்திய இணையமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். அதன் பிறகு பிரதமர் வி.பி.சிங்கின் பரிந்துரையில், 1992இல் இந்தியாவின் 9வது குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியா சுதந்திரம் அடைந்து பொன்விழா கண்ட சமயம் 1997இல் 10வது குடியரசுத் தலைவரான பெருமைக்குரியவர். பல்வேறு பதவிகள் வகித்து, சமூக, பொருளாதார மாற்றங்களுக்காக இவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் இவரது புகழை என்றென்றும் நிலைத்திருக்கச் செய்யும்.