உள்ளூர் செய்திகள்

இப்படித்தான் கற்கிறோம்!

பொது அறிவுச் செய்திகளை எங்கிருந்து பெறுகிறீர்கள்? என்ற கேள்வியை திருவான்மியூர், சரஸ்வதி வெங்கட்ராமன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் கேட்டபோது, தங்களுடைய எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்கள்.பிரவீன்குமார்: புத்தகங்கள் வழியாகவே நான் பொது அறிவு விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன். புத்தகங்களில் நிறைய பழங்கால விஷயங்கள் காணக் கிடைக்கும். துறைசார்ந்த செய்திகளுக்கும் நூல்கள் உதவுது. அடுத்து, புத்தகங்கள் படிப்பதால், நமது கற்பனைத் திறனும் வளருது. மொழி அறிவும் வளருது. வளர வளர திக்காமல் பேசவதற்கு, புத்தகங்கள் படிப்பது உதவியாக இருக்கு. பொது அறிவு விஷயங்களுக்குப் புத்தகங்களே உதவும்.ஜெகதீசன்: சோஷியல் மீடியா வழியாகத்தான், எனது பொதுஅறிவை வளர்த்துக்கொள்கிறேன். புத்தகங்களில் வெறும் எழுத்துக்களாக படிப்பதைவிட, சோஷியல் மீடியாவில் வீடியோவாக, படங்களாகத் தெரிந்துகொள்ளலாம். மேலும் என்னிக்கோ அச்சடிச்சு வச்ச தகவல்கள் இன்னிக்கு எப்படி புதுசாக இருக்கும்? இன்றைய தேதியில் உடனுக்குடன் செய்திகளைத் தருவது புத்தகங்கள் அல்ல. சோஷியல் மீடியாதான்.முகில் அரசன்: தஞ்சாவூர் கோவிலைக் கட்டியது ராஜராஜன் தான். அது என்னிக்கு படிச்சாலும் மாறப்போறதில்லை. சோஷியல் மீடியாவுல எல்லாம் ஒருவரி விஷயங்களை மட்டும் தான் பார்க்க முடியம். ஆனால் விரிவான தகவல்கள் தெரிய வேண்டுமானால், நூல்களும் செய்தித்தாள்களும்தாம் உதவும்.பாலாஜி:- சோஷியல் மீடியா வழியாகத்தான், நான் பொது அறிவு விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன். இன்னிக்கு ஒரு விஷயம் நடக்குதுன்னா... நாளைக் காலையில் வரும் பேப்பருக்காக நான் வெயிட் செய்யத் தேவையில்லை. இன்டர்நெட் இருந்தால் போதும்;வலைதளங்கள் வழியாக, உடனுக்குடன் தெரிஞ்சுக்க முடியுது. மழை, வெள்ளம், ஆட்சி மாற்றம் இப்படி பல விஷயங்களைச் சொல்ல முடியும். இன்னும் உதாரணம் சொல்லணும்னா.. மகாபாரதத்தைப் படிக்கிறோம்னு வையுங்க. பக்கம் பக்கமா ஒரு கேரக்டரைப் பத்தி படிச்சுத் தெரிஞ்சுக்குறதைவிட, யூடியூப்ல போய் மகாபாரதம் சீரியல் பார்த்தா போதும். நொடியில, அந்த கேரக்டர், அதனுடைய உருவம், ஆடை அமைப்பு எல்லாத்தையுமே பார்த்துக்க சோஷியல் மீடியாதான் ஹெல்ப்ஃபுல்லா இருக்கு.முகில்: பத்திரிகையோ, புத்தகமோ படிக்கும்போது, நாம் புரிந்துகொள்வதைக் கற்பனை செஞ்சு பார்த்தால், அது பிரம்மாண்டமானதாக இருக்கும். நமது கற்பனைத்திறனும் வளரும். அதைவிட்டு, எல்லாவற்றையும் இன்டர்நெட் மூலமாக விஷுவலாகவே பார்ப்பது என்பது, நமது கற்பனைத்திறனை அழிக்குது.ஜெகதீசன்: அதெல்லாம் ஒருபோதும் கற்பனைத்திறனை அழிக்காது. நம்மளுடைய இமேஜினேஷனை இன்னும் சுலபமாக்குவது இன்டர்நெட் தான். உதாரணமாக சொல்லப்போனால்... இணையத்துல ஒரு விஷயத்தை இன்னும் தெளிவாகவும் ஆழமாகவும் அறிந்துகொள்ள வாய்ப்பு உள்ளது. கூடவே, 360 டிகிரியில் கிடைக்கும் தாஜ்மஹால் படத்தை பார்த்துட்டோம்னா.. நேரில்போகும்போது, படத்தில் பார்த்த எல்லாவற்றையும் பார்த்துடலாம். நேர்ல போக முடியாதவங்களுக்கு, சோஷியல் மீடியாவே நேரில் பார்த்த ஃபீல் கொடுக்குது. பிரவீன்குமார்: என்னதான் 360 டிகிரியில் காட்டினாலும், புத்தகத்துல 'அந்த தூண்கள் அழகாக இருந்தன, அதன் உச்சியில் இப்படியான வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன..' என்றெல்லாம் எழுதப்பட்டிருப்பதைப் படிக்கும்போது, மனசுக்குள்ள ஏற்படுகின்ற காட்சிகள் போல, அவங்களோட 360 டிகிரி வராது. அதோட இப்படி படம் பார்த்துக்கிட்டு வீட்டுலேயே உட்கார்ந்துகொண்டால், சுற்றுலா எப்படி வளர்ச்சியடையும்? சோஷியல் மீடியா சுற்றுலாவையும் பாதிக்குது. (ஜெகதீசன்: இப்ப அதுவா நம்ம டாப்பிக்? என்று கேட்க, எல்லோரும் சிரிக்கிறார்கள்)பாலாஜி: இப்ப எனக்கு சிம்லா போகணும் வையுங்க... நான் இணையத்துல தான் முதலில் தேடுவேன்... அங்கே தங்குறதுக்கு சிறந்த ஹோட்டல் எது? எங்கே சாப்பிடலாம்? அங்க வெதர் எப்படி இருக்கு? இப்ப என்ன சீசன்? இப்படி பல தகவல்களை இணையம் மூலமாக தெரிஞ்சுக்க முடியும். முன்பெல்லாம் புத்தகத்தைப் பார்த்து. ஒரு மாதிரி தோராயமாக தெரிஞ்சுக்கிட்டுப் போவோம். ஆனால், இன்னிக்கு தகவல்கள் உடனடி, நேரலையா தெரியணும். இப்போ சமீபத்துல ஏற்பட்ட மாற்றங்கள் உட்பட அனைத்தையும் இணையத்தின் மூலம் தெரிஞ்சுக்க முடியும். இப்படி எல்லா தகவல்களையும் பெற்றுக்கொண்டு பயணம் போனால், என்னுடைய சிம்லா பயணம் சிறப்பானதாக இருக்கும்.பிரவீன்: சிம்லாவைப் பற்றி சோஷியல் மீடியாவிலேயும் இணையத்திலும் இல்லாத பல விஷயங்கள் இன்னும் அச்சு புத்தகத்துல இருக்குமே.. உங்க இணையத்துல எழுதுற பல கட்டுரைகளுக்கு ஆதாரமாக ஏதாவது ஒரு புத்தகத்தைத்தானே காட்டுறாங்க. ஓர் இடத்தைப் பற்றியோ, நபரைப் பற்றியோ முழுமையான வரலாறு தெரிஞ்சுக்கணும்னா.. புத்தகம் ரொம்ப அவசியமானது.பாலாஜி: விடமாட்டியே நீ... இன்றைய சூழலில் பொது அறிவை வளர்த்துக்கொள்ளணும்னா... புத்தகங்களின் உதவியோடு, இணையத்தையும் சோஷியல் மீடியாவையும் சேர்த்துப் பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும்னு, வாதத்தை முடிச்சு வச்சுக்கிறேன்.(மற்றவர்கள் கைதட்டுகின்றனர்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !