வரலாற்றுத் தடம்: பல்லவர் பரம்பரையை அறிய உதவும் சிற்பங்கள்
தமிழகத்தை ஆட்சிசெய்த சேர, சோழ, பாண்டியர் செய்யாத ஓர் அரிய வரலாற்று ஆவணத்தைப் பல்லவர்கள் தொகுத்து வைத்திருக்கிறார்கள். மன்னர்கள் தங்கள் கருத்துகள், சாதனைகள், ஆட்சி நிர்வாகம், வழங்கிய கொடை ஆகியவற்றைச் செப்புப் பட்டயங்கள், கல்வெட்டுகள் போன்றவற்றில் பதிவுசெய்து வைப்பர். தங்களின் உருவச் சிலை அல்லது ஓவியத்தை எங்கேனும் அரிதாய் பதிவு செய்திருப்பர்.ஆனால், பல்லவர்கள் மட்டும் தான் தங்கள் பரம்பரையில் வந்த மன்னர்கள், அவர்களின் பெயர் விவரம், அவர்களின் ஆட்சிக்காலத்தில் செய்த சிறப்பு போன்றவற்றை சிற்பத் தொகுதிகளாக ஒரு கோயில் சுவர் முழுக்கச் செதுக்கி வைத்திருக்கிறார்கள். சுவரின் மேற்பகுதியில் மன்னர்களின் உருவம், கீழ்ப்பகுதியில் அவர் காலத்தில் நடந்த முக்கிய போர், மன்னரின் பட்டாபிஷேகம் அல்லது மன்னர் அரியணையில் அமர்ந்திருப்பது போன்ற காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. இரண்டு அடுக்குகளாக இந்தச் சிற்பத் தொகுதிகள் செதுக்கப்பட்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட மன்னர் கோயில் கட்டினார் எனில், மன்னருக்குக் கீழே சுவரின் கீழ்ப்பகுதியில் கோயில் கோபுரம் போன்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு சிற்பத் தொகுதிகளுக்கு நடுவில் மன்னர்களைப் பற்றிய குறிப்புகள், பல்லவ கிரந்த எழுத்துகளில் கொடுக்கப்பட்டுள்ளன. நரசிம்ம பல்லவன் காலத்தில் சீனாவில் இருந்து வருகை புரிந்த யுவான் சுவாங் சிற்பமும் சுவரில் உள்ளது. இச்சிலை போதி தர்மர் என்று கூறுவோரும் உண்டு.சமணர்களை கழுவிலேற்றிய நிகழ்வும் ஒரு சிற்பத்தில் இடம் பெற்றுள்ளது.பல்லவர்களின் தலைநகரான காஞ்சியில் பரமேஸ்வர விண்ணகரம் என்னும் வைகுண்ட பெருமாள் கோயிலில் தான், இந்தச் சிற்பக் காட்சிகள் நான்கு சுவர் முழுக்கச் செதுக்கப்பட்டுள்ளன. பரமேஸ்வர வர்மன் எனப்படும் இரண்டாம் நந்திவர்மன் தான் இந்தக் கோயிலைக் கட்டினார். பிற்காலப் பல்லவர்களாக சிம்ம விஷ்ணு முதல், கடைசி மன்னரான அபராஜிதன் வரையிலான பதினெட்டு மன்னர்களின் சிற்பங்கள், வரலாற்றுக் குறிப்புகள் சுவர்களில் செதுக்கப்பட்டுள்ளன.பல்லவர் வரலாற்றை அறிய விரும்பும் ஆர்வலர்கள் அனைவரும் அவசியம் சென்று பார்க்க வேண்டிய இடம், காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயில் சிற்பங்கள்.