நான் யார்?
அயர்லாந்து, டங்கானன் நகரில் பிறந்த என்னுடைய இயற்பெயர் மார்கரெட் எலிசபெத் நோபிள். இந்தப் பெயரைச் சொன்னால், யாருக்கும் என்னைத் தெரியாது! தந்தை மத போதகராக இருந்ததால் எனக்கும் சிறுவயதில் இருந்தே கடவுள் பக்தியும் சேவை மனப்பான்மையும் இருந்தது. கல்லூரிப் படிப்பை முடித்து, இங்கிலாந்தில் ஆசிரியராகப் பணியை ஆரம்பித்தேன்.ஒருநாள் என்னுடைய தோழியின் வீட்டில் சுவாமியின் உரையை முதன்முதலில் கேட்டு உற்சாகமடைந்தேன். அன்றுமுதல் அவரது பேச்சுகளை அடிக்கடி கேட்கத் தொடங்கினேன். துறவு, மக்கள் சேவை என்று தன்வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டிருந்த அவரை, என்னுடைய குரு என்று தீர்மானித்தேன். சுவாமி அவர்கள் 1895ல் லண்டன் வந்திருந்தபோது, அவரைச் சந்தித்து ஆன்மிகம் குறித்த சந்தேகங்களைக் கேட்டு அவரது கவனத்தை ஈர்த்தேன். ''எங்கள் தேசத்துப் பெண்கள் கல்வி பெற நீ உதவ முடியும் என நம்புகிறேன்'' என்றார் சுவாமிஜி. இதை அரிய வாய்ப்பாகக் கருதி, உடனே புறப்பட்டு இந்தியா வந்தேன். இந்திய வரலாறு, மன்னர்கள், துறவிகள், தியாகிகள், எளிய, தூய, புனித வாழ்வு, தொண்டுகள் என பல விஷயங்களை சுவாமிஜியிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.கொல்கத்தாவில் ஒரு வீட்டில் பெண்கள் பள்ளி 1898ல் திறக்கப்பட்டது. அங்கு எழுதப் படிக்கவும், ஓவியம் வரையவும், தையல், மண்பொம்மை செய்யவும் சிறுமிகளுக்கு கற்றுக்கொடுத்தேன். தாய்மார்களுக்கு கல்வி, நுண்கலைகளைக் கற்பித்தேன். அப்போது வேகமாகப் பரவிய பிளேக் நோயைக் குணப்படுத்தும் நிவாரணக் குழுவுக்கு என்னைத் தலைமையேற்கச் சொன்னார் சுவாமிஜி. நோயாளிகளைப் பராமரிக்கவும், நகரைத் தூய்மைப்படுத்தவும் குழு அமைத்துத் தொண்டாற்றினேன். பள்ளிக்கு நிதி திரட்ட நியூயார்க்கில் 'தொண்டர் சங்கம்' என்ற அமைப்பை நிறுவினேன். சுவாமிஜியின் மறைவுக்கு பிறகு, அரவிந்தருடன் இணைந்து விடுதலை இயக்கத்தில் பங்கேற்று, புரட்சி பற்றிப் பேசியும் எழுதியும் வந்தேன். 'வந்தே மாதரம்' தேசியப் பாடலாக அங்கீகரிக்கப்படும் முன்பே என் பள்ளியில் காலை வணக்கப் பாடலாக அதைப் பாடச் செய்தேன். அன்னை சாரதா என்னை, அவருடைய மகளாகக் கருதி அன்பு செலுத்தினார். “பெண்களைப் பற்றிய என் சிந்தனைகளை மாற்றி, பெண் உரிமைக்காகப் போராடத் தூண்டுகோலாக இருந்தவர்” என்று பாரதியார் குறிப்பிட்டு, அவருடைய குருவாகவும் என்னை ஏற்றுக்கொண்டார்! சகோதரி நிவேதிதா (விவேகானந்தரின் சீடர்)பிறப்பு: அக்டோபர் 28, 1867மறைவு: அக்டோபர் 13, 1911