வொண்டர் என்னும் ஆச்சரியம்!
இசையமைப்புக்காகத் தரப்படும் கிராமி அவார்டுககளை 25 முறை வாங்கியவர். வாழ்நாள் சாதனையாளருக்கான கிராமி விருதையும் 1996ல் பெற்றவர். ஆஸ்கார் விருதையும் அடைந்தவர். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக செவ்விசை உலகில் குன்றாமல் ஒளிவிடும் ஒரு பெயர் ஸ்டீவி வொண்டர்.பெற்றோரின் ஆறு குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்தவர். பிறப்புக்காகக் குறித்த நாளுக்கு ஆறு வாரங்கள் முன்பே பிறந்தார். ஆகவே, உயிரைக் காப்பாற்றவே போராட வேண்டி இருந்தது. உயிர் பிழைத்தாலும் கண்பார்வை இல்லாமல் போனது. அதை ஒரு முடிவாகவோ முடக்கமாகவோ எடுத்துக் கொள்ளாமல் தன் வாழ்வை, தானே முழுவதுமாய் செதுக்கிக்கொண்டார் ஸ்டீவ்.ஒரு கறுப்பின இசைக் கலைஞர். 1950-ல் பிறந்த ஸ்டீவி ஒரு மழலை மேதை. அதனால்தான் பதினோரு வயதிலேயே ஒரு ஆல்பத்தை உருவாக்க முடிந்தது. அப்போது தொடங்கிய இசைப் பயணம் இன்றுவரை அமெரிக்க இசை உலகில் அவருக்கான தனி இடத்தைத் தந்திருக்கிறது.அவரால் பல்வேறு வாத்தியங்களை வாசிக்க முடியும். தனக்கான இசைக் கோவைகளை, தானே உருவாக்கி, பாடல்களையும் அவரே எழுதிவிடுவார். இயற்கை, நேசம், சகோதரத்துவம், அன்பு என நன்மைகள் மட்டுமே ஒலிக்கும் பாடல்கள் இவருடையவை. பற்பல சூப்பர் ஹிட் பாடல்களை உருவாக்கியவாறே பெரும்பாலான நாட்களைப் பயணங்களில் கழிப்பார். எத்தனையோ நாடுகளின் மேடைகளைத் தனது அற்புதமான இசையால் மலர்த்தியவர்.இசை வாழ்வின் சகல தருணங்களிலும் ஏற்ற இறக்கங்களைத் தொடர்ந்து சந்தித்து வருபவர். என்றாலும், ஸ்டீவியின் மனது 'இசை இசை' என்றே இயங்கக் கூடியது. தனிமையை, விடுபடுதலை இசை ஆக்கியவர்களில் ஸ்டீவுக்கு முக்கிய இடம் உண்டு என்று இசை விமர்சகர்கள் சொல்கிறார்கள்.ஸ்டீவின் வார்த்தைகள் ரசவாதம் புரிபவை. அவரது பாடல்களின் தலைப்புகளிலேயே அது தெரியும். என் ஆன்மாவின் இசை (1972), என் வாழ்வில் ஒரு முறை நிகழ்வதற்காக…(1968), கையொப்பமிடப்பட்டது:சீல் இடப்பட்டது மற்றும் கையளிக்கப்பட்டது (1970), வனக்காய்ச்சல் (1991) இவையெல்லாம் சாம்பிள்கள்.அவருடைய சமீபத்திய புகழ்பெற்ற ஆல்பமான A TIME TO LOVEல் அடங்கிய shelter in the rain பாடலின் பல்லவி இப்படி அமைகிறது. 'எப்போது வானத்தில் மேலதிக அற்புதங்கள் நிகழவில்லையோ அந்த மழைக்கு நான் உன் கூரையாவேன். உன் வலிகளின் ஊடாக ஆறுதலாவேன்.' ஸ்டீவி வொண்டர் என்பது வெறும் ஓர் இசைக்கலைஞரின் பெயர் அல்ல. இசைக்கு மத்தியிலான ஒரு வாழ்வு. - ஆத்மார்த்தி