வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு, வலசை வந்த வெளிநாட்டு பறவைகள், வேடந்தாங்கலில் இருந்து, மீண்டும், தங்கள் தாயகத்திற்கு, மே மாதத்தின் கடைசி வாரத்தில் புறப்பட்டு செல்லுகின்றன.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.இந்த ஏரி 36 ஏக்கர் பரப்பளவு கொண்டது.இதில், 16 அடி உயரம் நீர்ப்பிடிப்புக் கொண்டதாகும்.தற்போது, 4 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.
பங்களாதேஷ், இலங்கை, சைபிரியா, ஆஸ்திரேலியா மற்றும் மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பறவைகள் வேடந்தாங்கலுக்கு வலசை வருகின்றன.குறிப்பாக,செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில், குளிர்காலத்தில் பறவைகள் வலசை வர துவங்குகின்றன.டிச, ஜன, பிப்., மாதத்தில் வலசை வரும் பறவைகளின் கூட்டம் அதிகமாக இருக்கும்.மார்ச், ஏப்., மே மாதத்தின் கடைசி வாரத்தில் பறவைகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்படும்.
இதில், கூழைக் குடா, கரண்டி வாயன், நத்தை குத்தி நாரை, பாம்பு தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை, முக்குளிப்பான், மற்றும் வக்கா, புள்ளி மூக்கு வாத்து, வர்ண நாரை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் வந்தன.40 ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள், வந்து தங்கி, இனப்பெருக்கம் செய்து, 2 மடங்காக மீண்டும் தங்கள் தாய் நாட்டிற்கு புறப்பட்டு செல்கின்றன.இரவு நேரத்தில் கூட்டம், கூட்டமாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் இருந்து, தங்கள் தாய் நாட்டிற்கு பறவைகள் சென்ற வண்ணம் உள்ளன.தற்போது, 13 ஆயிரத்துக்கும் குறைவான பறவைகளே உள்ளது.
சைபீரியா, ஆஸ்திரேலியா, மியான்மர் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வர்ண நாரை, கூழைக்குடா, மிளிர் உடல் அரிவாள் மூக்கன், பாம்பு தாரா உள்ளிட்ட சில பறவை இனங்களே, தற்போது உள்ளன.பள்ளி கோடை விடுமுறை காலம் என்பதால், பெற்றோர்களுடன், பள்ளிக் குழந்தைகள், வேடந்தால் பறவைகள் சரணாலயத்திற்கு வந்து மிச்சமிருக்கும் பறவைகளை வந்து பார்த்து ரசிக்கலாம்.-எல்.முருகராஜ்.