பசுமை ரோபோ முதல் பாதுகாப்பு கருவி வரை! அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
கோவை கணபதி மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்கள், ரோபோட்டிக் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளில், தங்களின் தனித்திறமையால் அனைவரையும் அசத்தி வருகின்றனர்.மாணவர்களின் அறிவியல் திறனை ஊக்குவிக்கும் நோக்கில், பள்ளிகள் அளவில் அறிவியல் கண்டுபிடிப்பு கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இக்கண்காட்சிகளில் தற்போது 7ம் வகுப்பு பயிலும் கணபதி நடுநிலைப் பள்ளி மாணவர்கள், தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.வீட்டிற்குள் திருடர்கள் நுழைந்தால் ஒலி எழுப்பும் பாதுகாப்பு கருவி, சோலார் ஹவுஸ், மழைநீர் அளவீட்டுக் கருவி, சூரிய சக்தி மூலம் மின்சாரம் சேமிக்கும் பசுமை வீடு, தண்ணீர் தொட்டியில் நீர் நிரம்பும் போது அலாரம் எழுப்பும் மெக்கானிசம் போன்ற 10-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை ஹரிந்தர் ஸ்ரீ, டியான் மைக்கேல், விஜயராகவன், ஹரிஹரன், ஹந்தலராஜா, தர்னேஸ்வரன் மற்றும் சரண் ஆகிய மாணவர் குழுவினர் இணைந்து உருவாக்கியுள்ளனர்.பள்ளியில் 'ஸ்டெம் லேப்' வந்த பின், மாணவர்கள் மத்தியில், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் புது உத்வேகம் பிறந்துள்ளது.'ஸ்டெம் லேப்' ஆய்வகத்தை பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில், 'புல்லி கிரிப் கிரீன்' எனும் ரோபோட்டிக் வாகனத்தை, மாணவர்கள் சமீபத்தில் உருவாக்கியுள்ளனர்.இது, அதிக எடையுடைய பொருட்களை டிரைவரின்றி, ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் இயக்கக்கூடிய தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் கூறுகையில், 'இப்போதுதான் எங்கள் பள்ளியில், 'ஸ்டெம் லேப்' அமைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில், இந்த ஆய்வகத்தில் கற்றுக்கொண்டதின் அடிப்படையில், இந்த ரோபோ வாகனத்தை உருவாக்கியுள்ளோம். இனிமேலும் இந்த ஆய்வகத்தின் வாயிலாக பல கண்டுபிடிப்புகளைச் செய்து காண்பிப்போம்' என்றனர். கலக்குங்க ஸ்டூடண்ட்ஸ்!
மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் நோக்கில், பாட வகுப்புகள் முடிந்த பிறகு, அறிவியலில் ஆர்வமுள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தற்போது ஸ்டெம் லேப் அமைக்கப்பட்டுள்ளதால், அவர்களின் ஆர்வம் மேலும் அதிகரிக்கும் என நம்புகிறோம்,-ஆனந்த்குமார்தலைமையாசிரியர்