உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / வாக்கர் உதவியுடன் மாரத்தானில் நடந்து சாதிக்கிறார் சிவாஜி

வாக்கர் உதவியுடன் மாரத்தானில் நடந்து சாதிக்கிறார் சிவாஜி

விபத்தில் வலது காலை இழந்த நிலையிலும், மராத்தான் போட்டிகளில் இலக்கை நிறைவு செய்து சாதித்து வருகிறார், ஆர்.எஸ்.புரம் சிவாஜி ராஜேஷ், 29. ஐந்தாண்டுக்கு முன்பு லாரி விபத்தில் வலது காலை இழந்தார். மனதாலும் முடங்கி கிடந்தவரை மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குள் இழுத்து வந்தது ஒரு மராத்தான் போட்டி. ஒருமுறை பங்கேற்ற அவர், மன தைரியத்தாலும், தன்னம்பிக்கையாலும் 30க்கும் மேற்பட்ட மராத்தான் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதுவரை 155 கி.மீ., வரை நடந்து இலக்கை நிறைவு செய்துள்ளார். சமீபத்தில் கோவையில் நடந்த 5 கி.மீ., போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தானிலும் 'வாக்கர்' கொண்டு நடந்து இலக்கை அடைந்துள்ளார். 12 ஆயிரம் பேர் பங்கேற்ற இந்நிகழ்வில் சிவாஜியின் தன்னம்பிக்கை நடையானது துவண்டுபோய் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, பெரிய தைரியத்தை தந்துள்ளது எனலாம். “மராத்தான் போட்டிகளில் பங்கேற்பாளர்கள் அளித்த கரகோஷங்களும், வாழ்த்துகளும் என்னை அந்த விபத்து சம்பவத்தில் இருந்து வெளியே வருவதற்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது. சமீபத்தில் நடந்த மராத்தானில் இரண்டு மாற்றுத்திறனாளிகள் மட்டுமே பங்கேற்றனர். பாதுகாப்பாக இருங்கள்; மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள். தனது பெற்றோரின் உறுதுணையும், ஆதரவும் நான் மீண்டுவர முக்கிய காரணம். மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பள்ளிகளுக்கு முடிந்த உதவிகளை செய்கிறேன். என் உயிர் இருக்கும் வரை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வேன்,'' என, உறுதியாக நிற்கிறார் சிவாஜி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி