என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு
நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் சமீபத்தில் 'விலாயத் புத்தா' என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் நீளம் அதிகமாக இருக்கிறது என்று கூறி சோசியல் மீடியாவில் தொடர்ந்து பல விமர்சனங்கள் வந்ததை தொடர்ந்து படத்தின் 15 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டன. ஆனாலும் படம் குறித்து வெவ்வேறு விதமான எதிர்மறை விமர்சனங்கள் தொடர்ந்து சோசியல் மீடியாவில் பரப்பப்பட்டு வந்தன. இதனால் வசூல் ரீதியாகவும் படம் பதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக பிரித்விராஜ் இயக்கத்தில் 'லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமான 'எம்புரான்' படம் வெளியான போதும் சர்ச்சைகளில் சிக்கியது. அதில் இயக்குனரான பிரித்விராஜ் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
இந்த நிலையில் முன்னாள் நடிகையும் பிரித்விராஜின் தாயாரூமான மல்லிகா சுகுமாரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது, “எனது மகன் மீது தொடர்ந்து சோசியல் மீடியாவில் சைபர் கிரைம் தாக்குதல் நடைபெறுகிறது. அவரை சினிமாவிலிருந்து விலக்க வேண்டும் என சிலர் திட்டமிட்டு இந்த வேலைகளை செய்து வருகின்றனர். இதுகுறித்து எந்த சங்கங்களும் என் மகனுக்கு ஆதரவாக குரல் கொடுக்க முன் வரவில்லை. குறிப்பாக நடிகர் திலகனின் மகன் ஷம்மி திலகனின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் கூட அவருக்கு ஆதரவாக இருக்கும் எனது மகனுக்கு எதிராக செயல்படுபவர்கள் பட்டியலில் இருக்கிறார்கள். மொத்த திரையுலகமும் சேர்ந்து எனது மகனுக்காக குரல் கொடுத்து பாதுகாக்க வேண்டிய நேரம் இது” என்று கூறியுள்ளார்.