மராத்தி தெரிந்திருந்தும் சஞ்சய் தத் வேண்டுமென்றே பேசாமல் தவிர்த்தாரா ? : வெளிச்சம் போட்ட பழைய வீடியோ
சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற தஹி ஹண்டி என்கிற விழாவில் சிறப்பு விருந்தினராக மகாராஷ்டிரா போக்குவரத்து துறை அமைச்சருடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் சஞ்சய் தத்தை மராட்டிய மொழியில் பேசுமாறு அழைப்பு விடுத்தார் போக்குவரத்து துறை அமைச்சர். ஆனால் தனக்கு மராத்தி மொழி பேச வராது என்றும் தான் ஆறு வருடங்கள் எரவாடா சிறையில் இருந்தபோதும் கூட என்னால் மராத்தி மொழியை கற்க முடியவில்லை என்று கூறி மராத்தி பேசாமல் நழுவி ஹிந்தியில் பேசினார்.
சஞ்சய் தத் போன்ற பிரபலம் ஒருவர் மராத்தி தெரியாமல் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது சஞ்சய் தத் ஒரு இடத்தில் தன்னை புகைப்படம் எடுக்கும் புகைப்பட கலைஞர்களுடன் எந்தவித தயக்கமும் இன்றி மிகவும் இயல்பாக மராத்தியில் உரையாடும் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து மும்பையிலே வாழ்ந்து வரும் சஞ்சய் தத் மேடையில் வேண்டுமென்றே மராத்தி பேசுவதை தவிர்த்தது ஏன் என்று தற்போது பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி விவாதத்தை துவங்கி வைத்துள்ளனர்.