திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
கும்பகோணம்: நவகிரக கோயில்களில் ராகு பரிகார ஸ்தலமான திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
திருநாகேஸ்வரம் கிரிகுஜாம்பிகை உடனாய நாகநாதசுவாமி கோயில் நவக்கிரகங்களில் ராகு தலமாக விளங்குகிறது. புராதான சிறப்பு மிக்க இக்கோயிலில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய விழாக்களில் ஒன்றான திருக்கல்யாண பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்தில் சுவாமி அம்பாள் எழுந்தருள சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்களுடன் மாப்பிள்ளை அழைப்பு மாலை மாற்றுதல் வைபவமும் தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க திருமாங்கல்ய தாரணமான திருக்கல்யாண பிரம்மோற்சவம் கோலாகலமாக நடந்தது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.