முகையூர் கள்ளழக பெருமாள் பாலாற்றில் இறங்கிய உற்சவம்
மாமல்லபுரம் : முகையூர் கள்ளழக பெருமாள், பாலாற்றில் இறங்கும் உற்சவம், நேற்று, கோலாகலமாக நடந்தது. கூவத்துார் அடுத்த, முகையூர் கிராமத்தில், சுந்தரவல்லி தாயார் உடனுறை கள்ளழக பெருமாள் கோவில், பழமையான கிராம பொது கோவிலாக விளங்குகிறது. இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை பவுர்ணமி உற்சவம் நடைபெறும். சித்திரை பவுர்ணமி நாளான நேற்று, இந்த உற்சவம் விமரிசையாக நடந்தது.இதையொட்டி, கோவிலில், அதிகாலை 4:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மலர் அலங்காரம் செய்து, வழிபாடு நடந்தது. அதைத் தொடர்ந்து, சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, காலை 7:00 மணிக்கு, கோவிலிலிருந்து புறப்பட்டு, கூவத்துார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு சென்றார்.அக்கோவிலில், ஆண்டாள் சூடிய மாலை வழங்கி, வழிபாடு நடந்தது. அதை தொடர்ந்து, அங்கிருந்து புறப்பட்டு, 9:30 மணிக்கு, வாயலுார் பாலாற்றை அடைந்தார். ஆற்றுநீரை புனிதப்படுத்தி, அந்நீரில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து, ஆண்டாள் அளித்த மாலை அணிவித்து, மேளதாளம், வேதபாராயணம் முழங்க, வழிபாடு நடந்தது. அதை தொடர்ந்து, 10:45 மணிக்கு, குதிரை வாகனத்துடன், சுவாமி ஆற்றில் இறங்கி கடந்தார்.அவரை சுமந்து ஆற்றை கடந்து, வேப்பஞ்சேரி, கூவத்துார் ஆகிய பகுதிகளுக்கு சென்று, மண்டகப்படிக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை முகையூரை அடைந்தது.