பக்தர்கள் வருகை அதிகரிப்பு: பழநியில் 3 மணி நேரம் காத்திருப்பு
ADDED :3252 days ago
பழநி: விடுமுறையை முன்னிட்டு பழநிமலைக்கோயிலில் குவிந்த தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மூன்று மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தைப்பூசவிழாவை முன்னிட்டு பழநி ஞானதண்டயுதபாணிசுவாமி கோயிலுக்கு பாதயாத்திரை பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். நேற்று ஞாயிறு விடுமுறைகாரணமாக மலைக்கோயில் அதிகாலை முதல் வெளியூர் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் மலைக்கோயில் சென்றனர். பாதயாத்திரை பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்ததால் பொதுதரிசனம் வழியில் மூன்று மணிநேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். பக்தர்கள் பால்குடங்கள், காவடிகள் எடுத்து ஆட்டம்பாட்டத்துடன் கிரிவலம் வந்து மலைக்கோயிலில் அபிஷேகம், அர்ச்சனை செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.