உள்ளூர் செய்திகள்

தாகம் தீர்க்கும் பேரின்ப நதி

ஒரு அலுவலகத்தில் லஞ்ச லாவண்யம் அதிகம். அங்கு பணியாற்றும் ஒருவர் ஏராளமாக லஞ்சம் வாங்குவார். இஷ்டம்போல் செலவுசெய்வார். மனைவி, மக்களுக்கும் கொடுப்பார். அவர்களும் செலவழித்து மகிழ்ந்தார்கள். ஆனாலும், குற்ற மனசாட்சியும், குற்ற உணர்வும், என்றாவது மாட்டிக்கொள்வோமோ என்ற பயமும் அவரை ஆக்கிரமித்திருந்தது.இந்த சூழ்நிலையில் லஞ்சம் வாங்கும் நண்பரின் நடவடிக்கைகளை, அவரது சகா கவனித்தார். அவர் யாரிடமும் ஒரு காசு கூட கைநீட்டி வாங்க மாட்டார். அவரது முகம் எப்போதும் மலர்ச்சியுடன் இருக்கும். எதற்காகவும் கவலைப் படமாட்டார். இந்த சூழ்நிலையில் நண்பனை அழைத்து அறிவுரை சொன்னார்.''நண்பனே! லஞ்சம் வாங்குவதிலும், அதை செலவழிப்பதிலும் நிச்சயமாக மகிழ்ச்சி உண்டாகாது. எந்நேரமும் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டுமானால், ஆண்டவரின் நினைவு வேண்டும். அவரது நினைவு இருந்தால், அவர் நம்மை 'ஆனந்தம்' என்னும் தைலத்தால் அபிஷேகம் பண்ணுவார். பணத்தாலோ, சினிமாவாலோ, கெட்ட நண்பர்களாலோ, கூத்தினாலோ, குடியினாலோ வரும் சந்தோஷம் தற்காலிகமானது. ஒழுக்கமான வாழ்க்கை நடத்துபவன், தேவாதி தேவனைப் போல சந்தோஷமாக இருக்கிறான். எனவே, இனியாவது லஞ்சம் வாங்காதே! உன் மனம் அமைதியடையும். பேரின்ப நதி உனது தாகத்தை தீர்க்கும். நியாயமான வாழ்க்கையில் இருக்கும் ஆனந்தத்தை யாராலும் உன்னிடமிருந்து பறிக்க முடியாது,'' என்றார். ஒழுக்கமாக வாழ்வது, தாகம் தீர்க்கும் பேரின்பநதியாக அமையும்.