உள்ளூர் செய்திகள்

கோயில்களில் தைப்பூசம்

தை மாதத்தில் வரும் பவுர்ணமியும் பூச நட்சத்திரமும் கூடிய நாளை தைப்பூசமாக கொண்டாடுகிறோம். பழங்காலத்தில் இந்நாளில் தீர்த்தங்களில் நீராடியுள்ளனர். இந்நாளில் சிவபெருமான், முருகன் கோயில்களில் வழிபாடுகள் நடக்கும். புராணங்களில் இந்நாளன்று நடந்த நிகழ்ச்சிகள். * உலகம் தோன்றிய இந்நாளில் முதலில் தண்ணீரே படைக்கப்பட்டது. இதனால்தான் இன்றும் கோயில்களில் தெப்ப உற்ஸவம் நடக்கிறது. * பதஞ்சலி முனிவரின் வேண்டுகோளின்படி உமாதேவியுடன் சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடினார். * பழநி தண்டாயுதபாணி சுவாமிக்கு காவடி எடுத்தும் பாத யாத்திரை செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். * வடலுார் வள்ளலார் இந்நாளன்று ஜோதி ரூபமாய் கடவுளுடன் இரண்டறக் கலந்தார். * சூரபத்மனை அழிக்க முருகப்பெருமான் வேலாயுதத்தை தன் அம்மா சக்திதேவியிடம் வாங்கினார். * தாமிரபரணி கரையில் தவமிருந்த காந்திமதி அம்மனுக்கு நெல்லையப்பர் காட்சி கொடுத்தார். * வைணவத்தலங்களில் திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயிலில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இங்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்ற ஐந்து தேவியருடன் அருள்பாலிக்கிறார்.