கேளுங்க சொல்கிறோம்!
** தீமையும், நன்மையும் பிறர் தர வாரா என்பது உண்மையா?எஸ். ருக்மணி, பெருமாள்தாங்கல் புதூர்கணியன் பூங்குன்றனார் பாடிய புறநானூற்று வரி இது. நமக்கு உண்டாகும் நன்மை, தீமைக்கு காரணமாக மற்றவரை நினைப்பது உலக இயல்பு. ஆனால், உண்மையில் நாம் செய்த முன்வினைப் பயன் காரணமாகவே நன்மை, தீமை உண்டாகிறது.எல்லா ஊரும் நம் ஊரே! எல்லாரும் நம் உறவினரே என உலகத்தையே ஒரே குடும்பமாக கருதினால் தீமைக்கு இடமில்லை.* கல்வித்தடை நீங்க எந்த வழிபாடு மேற்கொள்ள வேண்டும்?எச்.உமா மகேஸ்வரி, மதுரை.சிவன் கோவிலில் தட்சிணாமூர்த்தியும், சரஸ்வதியும், பெருமாள் கோவிலில் ஹயக்ரீவர், சரஸ்வதி ஆகியோரையும் வழிபட கல்வியறிவு வளரும். நல்ல முயற்சியுடன் படிப்பவர்களுக்கு இந்த வழிபாடு உறுதுணையாக இருந்து ஊக்கமளிக்கும்.* வயதான எனக்கு எமதர்மனின் ஸ்லோகம் இருந்தால் சொல்லுங்கள்?எஸ்.பிந்து மாதவன், சென்னை.வயதான காலத்தில் நிம்மதியாக வாழ மிருத்யுஞ்ஜய, நரசிம்ம ஸ்தோத்திரங்களைப் படிக்க வேண்டும். மரண பயமில்லாமல் இறைவனடி சேர தினமும் கோவிலுக்குச் செல்லுதல், ஏழை எளியவர்களுக்கு உதவுதல், மற்றவர் மனம் புண்படாமல் நடத்தல் வேண்டும். எம பயம் நீங்க வேண்டும் என்பது தான் முக்கியமே தவிர, எமனுக்கென ஸ்லோகம் சொல்லி திருப்தி செய்யத் தேவையில்லை. * பவுர்ணமி தவிர எந்த நாட்களில் கிரிவலம் செய்யலாம்?ந.குருமூர்த்தி, திருவள்ளூர்எல்லா நாளும் ஏற்றவை தான். இருந்தாலும், பவுர்ணமியன்று புனிதமான மலைகளின் தெய்வீக சக்தி அதிகரிக்கும். அன்று தேவர்களும் பூலோகத்திற்கு வந்து வழிபடுவதாக ஐதீகம். திங்கள்கிழமை மற்றும் அஷ்டமி நாட்களில் பகலில் கிரிவலம் செல்வது சிறப்பு.* எந்த திசை நோக்கி சாப்பிடுவது சிறப்பானது?எஸ்.ரஞ்சனி, சென்னைகிழக்கு நோக்கி சாப்பிட ஆயுள் வளரும். மேற்கு என்றால் செல்வமும், தெற்கு என்றால் புகழும் உண்டாகும். வடக்கு நோக்கி சாப்பிடக் கூடாது. * குற்றம் செய்து விட்டால் கடவுளிடம் மன்னிப்பு கேட்பது, பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்பது இதில் எது சரி?எஸ்.வேல் அரவிந்த், காளனம்பட்டிஒரு முறை செய்தால் தவறு. அது தொடர்ந்தால் தப்பாகி விடும். தவறைத் திருத்திக் கொள்ளும் முயற்சியே மன்னிப்பு கேட்பது. தப்பு செய்தால் அதற்குரிய தண்டனையில் இருந்து தப்ப முடியாது. பாதிக்கப்பட்டவரிடம் கேட்க முடியாத சூழ்நிலை இருந்தால் மட்டுமே, கடவுளிடம் மன்னிப்பு கேட்கலாம். * பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது என்பது ஏன்?கே.இந்து குமரப்பன், விழுப்புரம்பொய்யால் ஏற்படும் தீமைக்கு அளவில்லை. இதன் கொடுமையைத் திருவள்ளுவர், பொய்யை மனதால் நினைப்பதும் கூடாது என்று குறிப்பிட்டார். 'உள்ளத்தால் உள்ளலும் தீதே' என்கிறார் அவர். இதனை உணர்ந்தே பெரியவர்கள், 'பொய் சொன்ன வாய்க்கு போஜனம்(உணவு) கிடைக்காது என்றார்கள்.