உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

விநாயகப்பெருமானுக்கு பல பெயர்கள் இருந்தாலும் அதில் பதினாறு பெயர்கள் முக்கியமானவை. இதை 'ஷோடச நாமா' என சொல்வர். 1. ஸுமுகர்: 'ஸு'முகம் என்றால் நல்ல முகம். அன்பும் ஆனந்தமும் பொங்குவதுதான் நல்ல முகம். மனதில் உள்ளதை அப்படியே வெளிக்காட்டுபவர். 2. ஏகதந்தர்: இதற்கு ஒரே தந்தம் உடையவர் என்று அர்த்தம். வியாஸர் மகாபாரதம் சொல்லும்போது அதை எழுத எழுத்தாணி வேண்டும். அதை தேட நேரம் இல்லாததால் தனது வலது தந்தத்தை ஒடித்து எழுதினார். 3. கபிலர்: இதற்கு பழுப்புச் சிவப்பு நிறமாக இருப்பர் என்று பொருள். 4. கஜகர்ணகர்: 'யானைக் காது உள்ளவர்' என்று அர்த்தம். இவர் கஜமுகர் (யானையின் முகம்) கொண்டவர் மட்டுமல்ல. யானைக்காதும் உடையவர். 5. லம்போதரர்: 'தொங்குகிற வயிற்றுக்காரர்' என்று அர்த்தம். (லம்பம் - தொங்குவது, உதரம் - வயிறு). தானே முழுமையானவர் என்று காட்டத்தான் பானை வயிறோடு இருக்கிறார். 6. விகடர்: பிறரை சிரிக்க வைக்க நகைச்சுவையாக செய்யும் செயல்களை 'விகடம்' என்போம். விநாயகரும் உலக நன்மைக்காக பல விளையாட்டுச் செயல்களை செய்துள்ளார். 7. விக்நராஜர்: இதற்கு 'விக்நேச்வரர்' என்று அர்த்தம். செயலில் ஏற்படும் விக்னங்களை (தடை) நீக்குபவர். 8. விநாயகர்: விசேஷம் பொருந்திய நாயகர், சிறப்புப் படைத்த தலைவர். தம்மைத்தாமே விஞ்சிய நாயகராக இவர் இருக்கிறார். 9. துாமகேது: துாமாஸுரன் என்ற அசுரனை அழித்ததால் இவருக்கு இந்தப்பெயர். இந்த அசுரன் விட்ட விஷப்புகையை உள்வாங்கி, அதை வைத்தே அவரை அழித்தார். இப்படி புகையை ஆயுதமாக கொண்டு வெற்றிபெற்றார். 10. கணாத்யக்ஷர்: இதை கண + அத்யக்ஷர் என்று பிரிக்கலாம். 'அத்யக்ஷர்' என்றால் தலைவர். சிவபெருமான் தன்னுடைய பூதகணங்களுக்கு அதிபதியாக விநாயகரையும், தேவகணங்களுக்கு அதிபதியாக முருகனையும் வைத்தார். 11. பாலசந்த்ரர்: இதற்கு 'கேசத்தின் முன் பக்கத்தில் சந்திரனை உடையவன்' என்பது பொருள். சிவபெருமானை போல் விநாயகரும் தன்னை அவமதித்த சந்திரனை தலையில் வைத்துக்கொண்டார். 12. கஜானனர்: யானை முகர் என்று அர்த்தம். உடல், புத்தி பலம், நினைவுக்கூர்மையக் கொண்டது யானை. 13. வக்ரதுண்டர்: 'வளைந்துள்ள தும்பிக்கை'யை கொண்டவர். வலம்புரியாகத் தும்பிக்கையை வளைத்தால் அதுவே ப்ரணவத்தின் (ஓம்) வடிவம்.14. சூர்ப்பகர்ணர்: முறம் (சூர்ப்பம்) போன்ற காதுகளை உடையவர். நமது வேண்டுதலை அவர் கேட்டுக்கொண்டாலும் அவற்றில் தள்ள வேண்டியதை தள்ளிவிட்டு, ஏற்க வேண்டியதை மட்டும் காதில் வாங்குவார். இதனால் இவருக்கு சூர்ப்பகர்ணர், முறக்காதர் என்ற பெயர் வந்தது. 15. ஹேரம்பர்: பாஸ்கரராயர் என்ற பண்டிதர் தனது 'கணேச ஸஹஸ்ர நாமத்தில்' ஹேரம்பர் என்பதற்கு, 'சைவ தந்த்ர ப்ரவர்த்தகர்' என குறிப்பிடுகிறார். இதற்கு சைவ ஆகமத்தைத் தோற்றுவித்தவர் என்று பொருள். 16. ஸ்கந்தபூர்வஜர்: ஸ்கந்தர் - முருகப்பெருமான், பூர்வஜர் - முன்னால் பிறந்தவர் என்று பொருள். முருகப்பெருமானுக்கு மூத்தவர் விநாயகர். இந்த பதினாறு பெயர்களை கீழ்க்கண்ட ஸ்லோகத்தை சொல்லி வழிபடலாம். ஸுமுகச் - சைகதந்தச்ச கபிலோ கஜகர்ணக:லம்போதரச்ச விகடோ விக்நராஜோ விநாயக:துாமகேதுர் - கணாத்யக்ஷ: பாலசந்த்ரோ கஜாநந: வக்ரதுண்ட: சூர்பகர்ணோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ: