உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* உலக இயக்கத்திற்கு காரணமாகவும், பஞ்ச பூதங்களின் அதிபதியாகவும், எண்குணத்தை உடையவர் சிவபெருமான். இவரது இடப்பாகத்தில் என்றும் பிரியாது விளங்குபவள் அன்னை பராசக்தி. * உமா, பார்வதி, மலைமகள், அங்கயற்கண்ணி, திரிபுரசுந்தரி, தேவி மகாகாளி, சண்டி, மகாலட்சுமி, சரஸ்வதி, பகவதி, பவானி, பைரவி என நுாறாயிரம் திருப்பெயர்கள் உண்டு. * வேதங்களில் முதன்மையானது ரிக்வேதம். இதில் பத்தாம் மண்டலத்தில் தேவீ ஸுக்தம், ராத்திரி என்ற தலைப்பில் தேவியின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. * பராசக்தியை ஊர்த்தேவதைகளில் காளி, பத்ரகாளி, பிடாரி, எல்லையம்மன், மயானரூபினி, ஆத்தாள், ஆயா செல்லியம்மன், மகமாயி என பல பெயர்களில் அழைப்பர். * மனிதர்களுடைய காலத்தை வேகமாக விரட்டி ஆயுளை அபகரிப்பவர் காலனாகிய எமன். மகாசக்தி அந்த காலனையே விரட்டுவதால் காளி எனப் பெயர் பெற்றாள்.* நிகம்ப சூதனி என்ற துர்கைக்கு ஒன்பதாம் நுாற்றாண்டில் வாழ்ந்த விஜயாலயன் என்ற சோழ மன்னன் கோயில் கட்டியுள்ளார். * சேரன் செங்குட்டுவன் காலத்தில் தோன்றிப் பரவிய பத்தினித் தெய்வ வழிபாடு நாளடைவில் காளியம்மன் வழிபாட்டுடன் கலந்துவிட்டது. * சங்ககாலத்தில் வாழ்ந்த பாலை நில மக்கள் காளியை வழிபட்டுள்ளனர். இதுதான் கொற்றவை வழிபாடு எனப்பெயர் பெற்றது. * காளிக்குரிய நாள் பரணியும், பூரமும் ஆகும். கேரளத்தில் பூரநாளன்று காளிக்கு திருவிழா நடத்துகின்றனர். * காளி ஆடிய நடனங்களில் ஒன்று மரக்கால் நடனம். இது உறுதியான மரத்தால் செய்யப்பட்ட கட்டைகளைக் கால்களில் கட்டி அதன்மீது ஊன்றி ஆடுதலாகும்.