உள்ளூர் செய்திகள்

பணக்காரராக வாழ...

இட்சுவாகு குலத்தில் பிறந்த மன்னர் சித்திரபானு. இவரை சந்திக்க அஷ்டவக்கிர முனிவர் சிவராத்திரியன்று வந்தார். விரதமிருந்த மன்னர் முனிவரிடம், “ஐயனே! 'சுஸ்வரன்' என்னும் வேடனாக முற்பிறவியில் நான் வாழ்ந்தேன். வேட்டையாடி மாமிசத்தை விற்பது என் தொழில். ஒருநாள் பகலில் மிருகம் ஏதும் சிக்கவில்லை. வேறு வழியின்றி மான் ஒன்றைக் கொன்று காட்டிலேயே தங்கினேன். மிருகங்களிடம் இருந்து தப்பி வாழ ஒரு மரத்தில் ஏறினேன். பசி மயக்கத்தால் துாக்கம் வரவில்லை. இலைகளைப் பறித்து கீழே போட்டபடியே இருந்தேன். பொழுது புலர்ந்தது. அந்த நாள் சிவராத்திரி என்பதை அப்போது நான் அறியவில்லை. மரணம் ஏற்பட்டு உயிர் நீங்கிய பின் சிவகணங்கள் காட்சியளித்து 'நீ வேட்டையாடச் சென்ற நாள் மகாசிவராத்திரி. அன்று நீ ஏறியது வில்வமரம். அதன் அடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. வில்வ இலைகளைப் பறித்து போட்டாய். உறங்காமல் விழித்திருந்தபடி சிவலிங்கத்துக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்த புண்ணியத்தால் நற்கதி கிடைத்தது' என்றனர். அதனால் சித்திரபானு என்னும் பெயரில் மன்னராக பிறக்கும் பேறு பெற்றேன்” என்றார்.சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் பணக்காரர்களாக வாழ்வர். அம்பு படுக்கையில் கிடந்த பீஷ்மர் மூலம் இந்த வரலாற்றை பாண்டவர்கள் கேட்டனர்.