மனபலம் அதிகரிக்க....
வேலுார் மாவட்டம் சோளிங்கர் மலைமீது யோக நரசிம்மரும், அருகிலுள்ள சிறிய மலையில் யோக ஆஞ்சநேயரும் இருக்கின்றனர். இத்தலத்தை சோளசிம்ஹபுரம் என முற்காலத்தில் அழைத்தனர். பிறகு 'சோள லிங்கபுரம்' ஆகி தற்போது சோளிங்கர் ஆனது. இங்கு விஸ்வாமித்திரர், சப்தரிஷிகள் தவம் செய்து நரசிம்மரை தரிசித்தனர். இந்த மலைக்கு கடிகாசலம் என பெயருண்டு. 'கடிகா' என்றால் 'நாழிகை'. 'அசலம்' என்றால் 'மலை'. இங்குள்ள நரசிம்மரை வணங்கி ஒரு நாழிகை நேரம் (24 நிமிடம்) தங்கினால் நன்மை கிடைக்கும். ஒருமுறை ராமர் தன் அவதார காலம் முடிந்ததும் வைகுண்டம் செல்லத் தயாரானார். அப்போது அனுமன், 'உங்களுடன் நானும் வருகிறேன்' என்றார். அதற்கு அவர், 'கடிகாசலத்தில் சப்தரிஷிகள் தவம் செய்கிறார்கள். அவர்களுக்கு அசுரர்களால் பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்' என்றார். அதன்படி சோளிங்கர் வந்த போது காலன், கேயன் என்னும் அசுரர்கள் முனிவர்களின் தவத்திற்கு இடையூறு செய்வதைக் கண்டார். மகாவிஷ்ணுவை வேண்டி சங்கு, சக்கரத்தைப் பெற்று அனுமன் அவர்களைக் கொன்றார். இங்குள்ள அனுமன் கையில் சங்கு, சக்கரம், ஜபமாலை உள்ளது. இவர் பெரிய மலையில் இருக்கும் யோகநரசிம்மரின் திருவடிகளை பார்த்தபடி இருக்கிறார். அமிர்தவல்லித்தாயார் என்ற பெயருடன் மகாலட்சுமி இருக்கிறாள். நரசிம்ம ஜெயந்தியன்று இங்கு தரிசனம் செய்தால் மன பலம், உடல் பலம் அதிகரிக்கும்.