பறந்தது கத்தி! தெளிந்தது புத்தி!
''என்னை விடக் கண்ணன் மீது அதிகம் பக்தி செலுத்துபவர் யார்?” என இறுமாப்பு கொண்டான் அர்ஜூனன். இதையறிந்த கண்ணன் அர்ஜூனனிடம், ''அஸ்தினாபுரத்தில் பிங்கலை என்றொரு பாட்டி இருக்கிறாள். அவளை சந்திக்கலாம் வா'' என்றான்.''அதற்கு முன் இன்னொரு விஷயம் அர்ஜூனா.... உண்மையான தோற்றத்தில் அங்கு சென்றால், உயிருக்கு ஆபத்து நேரலாம். அதனால், பெண்ணாக மாறிச் செல்வோம்'' என்று சொல்ல, இருவரும் அப்படியே சென்றனர்.''பாட்டி... நீண்ட துாரம்நடந்த களைப்பில் இருக்கிறோம். சற்று இளைப்பாறலாமா'' என பிங்கலையிடம் கேட்டான் கண்ணன்.''தாராளமாக ஓய்வெடுங்கள். நானும் வீட்டுபூஜையை முடித்து விடுகிறேன்'' என்றாள் பிங்கலை. அங்கு ஒரு பீடத்தில் கண்ணன் சிலையும், அதன் அருகில் சிறிய, நடுத்தர, பெரியதுமாக மூன்று கத்திகள் இருந்தன. ''சுவாமி சிலையோடு, கத்திகள் இருக்கிறதே ஏன்?” எனக் கேட்டான் கண்ணன்.''உண்மை தான். என் கண்ணனுக்கு தீங்கு செய்த எதிரிகளை கொல்ல வேண்டியிருக்கிறது.'' என்றாள் பாட்டி,'' யார் பாட்டி?”''அவர்கள்.... குசேலன், பாஞ்சாலி, அர்ஜூனன். இதில், குசேலனைக் கொல்ல இதோ இந்த சின்னக்கத்தி. பாஞ்சாலிக்கு நடுத்தரம். அர்ஜூனனைக் கொல்ல பெரிய கத்தி'' என்றாள் பிங்கலை.அர்ஜூனன் திகைத்துப் போனான். '' மூவரும் கண்ணனுக்கு என்ன கொடுமை செய்தார்கள்?” என்றான் அர்ஜூனன்.'' வெண்ணெய் விரும்பும் கண்ணனுக்கு, அவல் தரலாமா? அவலால் அவனது தாமரை இதழ் நோகுமே?''''பாஞ்சாலி பெண் அல்லவா... அவள் எப்படி உங்களுக்கு எதிரியானாள்?” என்றான் அர்ஜூனன்.''திரவுபதியின் சேலையை இழுத்த துச்சாதனனுக்கு கைகள் நோகும்போது, அதை வாரி வழங்கிய கண்ணனுக்கு மட்டும் கை நோகாதா என்ன? அவளையும் நான் சும்மா விட மாட்டேன்”''பக்தியில் சிறந்த அர்ஜூனன் மீது கோபம் கொண்டது ஏன்?” என்றான் கண்ணன்.''நீ தான் அவனை மெச்ச வேண்டும். உண்மையான பக்தன், சுவாமியின் கை வலிக்குமாறு தேரோட்டச் செய்வானா?''கண்ணனுக்குச் சிரிப்பு வந்தது.''பாட்டி... குசேலனிடம் அவல் தவிர வேறு ஏதுமில்லை. அவனை மன்னியுங்கள்'' என்றான் கண்ணன். யோசித்த பிங்கலை, பீடத்திலிருந்த சிறிய கத்தியை எறிந்தாள். ''பாஞ்சாலியையும் மன்னியுங்கள் பாட்டி.... சேலை கொடுத்ததால் கண்ணனுக்கு கைகள் வலித்தது உண்மை என்றாலும் பெண்ணுக்கு மானம் பெரிதல்லவா?” என்றார்.பிங்கலை இரண்டாவது கத்தியையும் வீசினாள். ''போரில் வெல்ல வேண்டும் என்ற சுயநலத்தால் தேரோட்டச் செய்த அர்ஜூனனை மன்னிக்க மாட்டேன்” என்றாள் பிங்கலை.அப்போது கண்ணன் உரத்த குரலில், ''பாட்டி... அர்ஜூனனைக் கொன்றால், தன் அன்பு நண்பனை இழந்த கண்ணன் மனம் வருந்துமே? அது பாவமில்லையா...?”'' அடடே... இந்த கோணத்தில் சிந்திக்கவில்லையே.... கண்ணனுக்கு வருத்தம் அளிக்கும் செயலை ஒரு போதும் செய்ய மாட்டேன்'' என்று சொல்லி மூன்றாவது கத்தியை பாட்டி வீசினாள். பாட்டியின் பக்தியைக் கண்டு அர்ஜூனன் புத்தி தெளிந்தான்.