தர்ப்பை காப்பு பார்க்கணுமா! உத்தமபாளையம் வாங்க!
சந்தனக்காப்பு, வெண்ணெய் காப்பு என சுவாமிகளுக்கு பலவிதமாக காப்பிடுவதைப் பார்த்திருப்பீர்கள். தர்ப்பை சாம்பலைக் கொண்டு காப்பிடும் தெய்வத்தைக் காண வேண்டுமா! தேனி மாவட்டம் உத்தமபாளையத்திலுள்ள பாறையடி முத்தையா கோவிலுக்கு அமாவாசையன்று வாருங்கள். தல வரலாறு: இங்குள்ள குன்றின் மீது ஒரு சிவன் கோயில் இருந்தது. இவரது காவலராக முத்துக்கருப்பண சுவாமி எழுந்தருளியிருந்தார். மந்திரவாதி ஒருவன், இங்குள்ள சிவலிங்கத்தைக் கொண்டு செல்ல முயன்றான். முத்துக்கருப்பணர் அவனைத் தடுத்து வதம் செய்தார். பின்பு நிரந்தரமாக அடிவாரத்திலேயே எழுந்தருளினார். காலப்போக்கில் குன்றின் மீதிருந்த சிவன் கோவில் மறைந்து போனது. பின், முத்துக்கருப்பண்ணர் பிரசித்தி பெற்று விட்டார். இவருக்கு தனிக்கோவில் கட்டப்பட்டது. பாறையின் அடியில் காட்சி தருவதால், 'பாறையடி முத்தையா' என்று பெயரிடப்பட்டது.கதவு தட்டி பூஜை: சுவாமி முறுக்கு மீசையுடன் ஆஜானுபாகுவாக காட்சி தருகிறார். ஒரு கையில் அரிவாள் இருக்கிறது. இடது காலால் மந்திரவாதியின் மார்பை மிதித்திருக்கிறார். சுவாமியின் முகம், மார்பு ஆகியவை நவபாஷாணத்தால் ஆனது. இந்தப் பகுதியில் சுவாமிக்கு அடிக்கடி வியர்க்கும் என்பதால் விசிறி விடுகிறார்கள். அர்த்தஜாம பூஜையின்போது, சுவாமியின் முன்பு நீர் நிரம்பிய பாத்திரத்தை வைத்து நடையை அடைத்து விடுகிறார்கள். இந்த தீர்த்தமே பிரசாதமாகத் தரப்படுகிறது. காலையில் நடை திறக்கும் முன்பாக அர்ச்சகர், சன்னிதி கதவை இரண்டு முறை தட்டிவிட்டு வெளியிலேயே நின்று கொள்கிறார். சிறிது நேரம் கழித்து மீண்டும் கதவை தட்டிவிட்டு, அதன் பின்பே சன்னிதிக்குள் சென்று சுவாமியை பூஜிக்கிறார். சுவாமியிடம் அனுமதி பெற்றே நடை திறக்க வேண்டுமென்பதன் அடிப்படையில் இவ்வாறு செய்கிறார்கள். பெண்களுக்கு அனுமதியில்லை: சுவாமிக்கு அபிஷேகம் கிடையாது. இவரது உக்கிரத்தைக் குறைக்கும் விதமாக, அமாவாசையன்று நிழலில் உலர்த்திய தர்ப்பையை தீயில் எரித்து கிடைக்கும் சாம்பலுடன் கஸ்தூரி, ஜவ்வாது, புனுகு, பச்சைக்கற்பூரம் மற்றும் ஐந்து வித எண்ணெய் சேர்த்த கலவை தயாரித்து அதைக் கொண்டு காப்பிடுகின்றனர். பவுர்ணமியன்று வெண்ணெய் காப்பு செய்யப்படும். இந்த வேளையில் ஏழு வித கனிகளை நைவேத்யமாக படைத்து பிரசாதமாகக் கொடுக்கின்றனர். தைலக்காப்பின்போது சுவாமி உக்கிரமாக இருப்பார். இச்சமயத்தில் மட்டும் சன்னிதிக்குள் பெண்கள், குழந்தைகளை அனுமதிப்பதில்லை. சுவாமி சன்னிதியின் இருபுறமும் தேவபூதகன், ஆகாச பூதகன் என்ற காவலர்கள் உள்ளனர். பிரகாரத்தில் நவக்கிரகம், அரசமரத்தின் கீழ் புற்று வடிவில் நாகர் சன்னிதிகள் உள்ளன.சிவனை பூஜிக்கும் அம்மன்: கோவில் எதிரில் நந்தியுடன் அக்னி வீரபத்திரர், தட்சனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறார். கோவிலுக்கு பின்புறமுள்ள குன்றில் சதுர பீடத்துடன் கூடிய ஆகாய லிங்கமாக சிவன் காட்சி தருகிறார். அருகில் பார்வதி, மண்டியிட்டு அமர்ந்து மலருடன் சிவபூஜை செய்யும் சிற்பம் உள்ளது. குன்றின் அடியில் 'பாறையடி தீர்த்தம்' இருக்கிறது.வித்தியாசமான தட்சிணாமூர்த்தி: முக்தி விநாயகர் சன்னிதி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி, கல்லால மரம், முயலகன், சீடர்கள், உடுக்கை, அக்னி என எதுவும் இல்லாமல் காட்சி தருகிறார். இடது காலை மடக்கி யோகப்பட்டை அணிந்து, சின்முத்திரை காட்டும் இவர், கைகளில் மலர் வைத்திருக்கிறார். இருப்பிடம்: தேனியிலிருந்து 31 கி.மீ., தூரத்தில் உத்தமபாளையம். பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., தூரத்தில் கோவில்.நேரம்: காலை 9.00 - 12.00, மாலை 5.00 - இரவு 8.00 மணி. வெள்ளியன்று காலை 9.00 - இரவு 8.00 மணி.