உள்ளூர் செய்திகள்

சாமுண்டீஸ்வரியின் சகோதரி

சாமுண்டீஸ்வரியின் சகோதரியான ஜுவாலாமுகி மைசூரு அருகிலுள்ள உத்தனஹள்ளியில் கோவில் கொண்டிருக்கிறாள். தல வரலாறு: ரத்த பீஜாசுரன் என்னும் அசுரனுடைய உடம்பில் இருந்து வெளி வரும் ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்தும் பல அசுரர்கள் தோன்றினர். அவர்கள் தேவர்களைத் துன்புறுத்தினர். அவர்கள் பார்வதியிடம் முறையிட்டனர். உக்ர ரூபத்துடன் நாக்கை நீட்டியபடி, கோரைப் பற்களுடன் 'ஜுவாலாமுகி' என்ற திருநாமத்தோடு தேவி புறப்பட்டாள். அசுரனைக் கொன்றாள். அவனது உடம்பிலிருந்து வெளிப்பட்ட ரத்தத்தைக் குடித்தாள். அநீதியை அழித்து தர்மத்தைக் காத்த இவளே உத்தனஹள்ளியில் அருள்பாலிக்கிறாள். குகை கருவறை: சாமுண்டி மலையை அடுத்த குன்றில் ஜுவாலாமுகி கோவில் உள்ளது. இந்த அம்பிகை ஒரு புற்றில் இருந்து வெளிப்பட்டிருக்கிறாள். மிகச் சிறிய வாசலுடன் குகை போல சன்னிதி உள்ளது. கைகளில் திரிசூலம், உடுக்கை, வாள், பாணம் என்னும் ரத்த பாத்திரம் ஏந்தி நிற்கிறாள். கருவறையில் அம்மன் நாக்கை நீட்டி கோபத்தோடு காட்சி தருகிறாள். உற்ஸவ அம்மன் சாந்தமாக இருக்கிறாள். ஜுவாலாமுகியை தரிசித்த பிறகே சாமுண்டீஸ்வரியை வணங்க வேண்டும் என்பது ஐதீகம். ராகுகால தீபம்: வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் இங்கு தீபமேற்றி வழிபட சர்ப்ப தோஷம், நாகதோஷம் விலகும். பவுர்ணமி அன்று வெல்லம், தேங்காய், வாழைப்பழ கலவையை நிவேதனம் செய்து, தீபமேற்றினால் திருமணத்தடை நீங்கும். ராமநாதேஸ்வரர்: ஜுவாலாமுகி சன்னிதியை ஒட்டி சிவன் சன்னிதி உள்ளது. அசுரனை வதம் செய்த பாவம் நீங்க, அம்பிகை சிவனை வழிபட்டு பாவம் நீங்கப் பெற்றாள். சித்தத்தை (அறிவை) தெளிவாக்குபவர் என்பதால் இவர் 'சித்தேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். சீதையைப் பிரிந்த ராமர் இங்கு வந்து வழிபட்டதால் ராமநாதேஸ்வரர் என்றும் பெயர் பெற்றார். விநாயகர், சுப்பிரமணியர், கால பைரவர், நாக பைரவர், மாரகதண்ட நாயக்கர் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. திறக்கும்நேரம்: காலை 7.30 - பகல் 2.00 மணி, மாலை 3.00 - இரவு 9.00 மணி.இருப்பிடம்: மைசூருவில் இருந்து 12 கி.மீ., தொலைபேசி: 098447 05061.