உள்ளூர் செய்திகள்

தலவிருட்சங்கள் - 6

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் - மருத மரம்குடவரைக்கோயிலாக குன்றில் அமைந்திருப்பது பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில். எருக்காட்டூர், எக்காட்டூர், மருதன்குடி, திருவீங்கைகுடி, திருவீங்கைச்சுரம். ராசநாராயணபுரம், மருதங்கூர், தென்மருதுார், கணேசபுரம், கணேசமாநகரம், பிள்ளைநகர், கீழ்குன்றாட்டு நாடு என இதற்கு பெயர்கள் உண்டு. விநாயகர், சிவபெருமானின் திருவுருவம் புடைப்பு சிற்பமாக இக்கோயிலில் செதுக்கப் பட்டுள்ளன. இங்குள்ள விநாயகர் கற்பக விநாயகர் என்றும், சிவபெருமான் திருவீசர் என்றும் அழைக்கப் படுகின்றனர். இக்கோயில் 2500 ஆண்டுகள் பழமையானது. இங்குள்ள கல்வெட்டுகள் பத்தாம் நுாற்றாண்டில் இருந்து பன்னிரண்டாம் நுாற்றாண்டைச் சேர்ந்தவை.வடக்கு நோக்கியுள்ள ஆறடி உயர மூலவர் இரு கைகளுடன் கால்களை மடித்த நிலையில் உள்ளார். தும்பிக்கை வலதுபுறம் வளைந்திருப்பதால் 'வலம்புரி விநாயகர்' எனப்படுகிறார். ஓம் என்னும் மந்திரத்தின் 'ஓ' வடிவத்தில் துதிக்கையும், 'ம்' வடிவத்தில் மோதகமும் உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை சந்தன அபிஷேகம் நடக்கிறது. திருமணத்தடை நீங்கவும். குழந்தைப்பேறுக்காகவும், கல்வித்திறன் மேம்படவும் வழிபடுபவர்கள் வேட்டி, மேல் அங்கியை சுவாமிக்கு காணிக்கை அளிக்கின்றனர். கார்த்தியாயினி, நாகலிங்கம், பசுபதீஸ்வருக்கும் சன்னதிகள் உள்ளன. மருதமரங்கள் நிறைந்த தலங்களை அர்ஜுன ஷேத்திரம் என்பர். பிள்ளையார்பட்டியில் உள்ள சிவன் அர்ஜுனபுரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் தலவிருட்சம் அர்ஜுனம் என்னும் மருதமரம். டெர்மினேலியா அர்ஜுனா என்பது இதன் தாவரவியல் பெயர். காம்ப்ரட்டேசியே குடும்பத்தை சேர்ந்தது. சுவாதி நட்சத்திரத்திற்கு உகந்த மூலிகை இது. அகத்தியர் பாடிய பாடல்ஓதமெனு நீரிழிவை யோட்டும் பிரமேகங்காதமென வோடக் கடத்துங்காண்-போதமயக்க மொடுதாக மாறாச் சுரத்தின்தயக்கமறுக் கும் மருதஞ் சாற்றுமருதமரத்தின் இலை, பட்டை, பூ ஆகியன சித்த மருத்துவத்தில் பயன்படுகின்றன. சர்க்கரை நோய், இதய நோய்களை கட்டுப்படுத்தும் தன்மை மருதமரப்பட்டைக்கு உண்டு. சித்தர் தேரையர் பாடிய பாடல்குட்டக கங்கிருமி கோர வயிற்று வலிதுட்டவறட்சூலை தொலையுங்காண்-சிட்டிப்பொருதம்பா மென்னு விழிப்பூவையரே! நாளுமருதம்பா ரென்றளவில் மாய்ந்து.மருதமரத்தின் பழத்தை வேக வைத்து புண்களின் மீது தடவினால் குணமாகும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவு நிற்க மருதம்பட்டை ஊறிய நீரால் வாயை கொப்பளிக்க வேண்டும். நெஞ்சுவலி தீர மருதம்பட்டை பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். தன்வந்தரிபாடிய பாடல்போகும் பாண்டு புகலுங்கா மாலைபோம்ஏகும் ரோமம் எழும்பும் பெருஞ்சிரங்காகுமே சொறி கருமேகந் தான்றும்பாகுதன் வந்திரி பாடின துண்மையேமருதம்பட்டையிலிருந்து தயாரான தைலத்தை சாப்பிட்டால் இளமை நிலைக்கும். தோல் நோய்கள் மறையும். விநாயகர் சதுர்த்தியன்று அரிசி, எள், பருப்பு, தேங்காய், நெய், ஏலக்காய், சர்க்கரை கொண்டு பெரிய கொழுக்கட்டை செய்து பாரம்பரிய முறையில் வேகவைத்த பின் மறுநாள் சூடு ஆறவும் பிரசாதமாக வழங்குவர். இந்த கொழுக்கட்டையை உண்டால் உடல்வலி, வாயு தொல்லை தீரும். வைட்டமின் 'ஈ' சத்து நிறைந்த இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எலும்புக்கு பலம் தரும் கொழுக்கட்டை பிரசாதமாகவும், இதயத்தை பலப்படுத்தும் மருத மரத்தை தலவிருட்சமாகவும், எளிய உயிரினமான மூஞ்சுறுவை வாகனமாகவும், 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை அடையாளமாகவும் கொண்டிருக்கும் கற்பக விநாயகரின் பாதம் பணிவோம். எப்படி செல்வது மதுரையில் இருந்து 75 கி.மீ., திருச்சியில் இருந்து 96 கி.மீ.,நேரம்: காலை 6:00 - 12:00 மணி: மாலை 4:௦௦ - 8:00 மணிதொடர்புக்கு: 04577 - 264 260-தொடரும்ஜெ.ஜெயவெங்கடேஷ்98421 67567jeyavenkateshdrs@gmail.com