சிலந்தி வலை சாஸ்தா
வானத்தையே எல்லையாகக் கொண்டு, கூரை இல்லாமல் திருவனந்தபுரம் கரமனையில் தர்மசாஸ்தா அருள்பாலிக்கிறார். இவர் குடியிருக்கும் கோயில் 'திருவனந்தபுரத்தின் சபரிமலை'யாக திகழ்கிறது.தல வரலாறு: திருவனந்தபுரம் பகுதி முழுவதும், ஒரு காலத்தில் காடாக இருந்தது. இதை 'அனந்தன் காடு' என்பர். இதை ஆண்ட கர மகாராஜா, பல கோயில்கள் கட்டினார். ஒரு சமயம், காட்டு வழியே அவர் சென்ற போது, சிலந்திகள் வலை பின்னிய ஒரு இடத்தில் சாஸ்தா சிலை கிடக்க கண்டார். அதை ஊருக்குள் கொண்டு வந்து கோயில் கட்ட முடிவு செய்தார்.அன்றிரவு அவரது கனவில் சாஸ்தா தோன்றி, ''என்னை கொண்டு செல்ல வேண்டாம். காட்டில் இருப்பதையே விரும்புகிறேன். கூரை இல்லாமல் கோயில் எழுப்பவும்; வானம் எல்லையாக இருக்கட்டும்' என்றார். அதன்படி, சிலை கண்டெடுத்த இடத்தில் கோயில் கட்டினார்.கோயில் அமைப்பு: மேற்கூரை இல்லாவிட்டாலும், சிலந்தி வலை போல கூம்பை அமைத்துள்ளனர். கருவறையை சுற்றி நாலா புறமும் சுவர்களின் நடுவில் பலகணி(ஜன்னல்) உள்ளது. சுவாமியை, நேர், எதிரில் மட்டும் அல்லாது, பலகணிகளின் வழியாகவும் தரிசிக்கலாம். இவருக்கு 'ஆதி சாஸ்தா' என பெயருண்டு. சிறப்பம்சம்: சபரிமலையாக இத்தலத்தை கருதுகின்றனர். இருமுடி கட்டி வந்து வழிபடுகின்றனர். எல்லா மலையாள மாதப்பிறப்பு நாட்களிலும் நெய் அபிஷேகம் செய்கின்றனர். சுப நிகழ்ச்சிகளுக்கு, சாஸ்தாவுக்கு முதல் பத்திரிக்கை வைக்கின்றனர். இங்குள்ள அரசமரத்தடியில் சிவலிங்கம், நாகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.எப்படி செல்வது: திருவனந்தபுரம் கிழக்கு கோட்டை பஸ் ஸ்டாண்டிலிருந்து 5 கி.மீ.,விசஷே நாட்கள்: கார்த்திகை முதல் தேதி துவங்கி, 41 நாட்கள் மண்டல பூஜை காலம், 41ம் நாள் கரமனை ஆற்றில் ஆராட்டு விழா.நேரம்: அதிகாலை 5:00 - 11:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 0471 - 245 1837அருகிலுள்ள தலம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில்