குழப்பம் தீர்க்கும் வீரபத்திரர்
மனதிலே குழப்பமா, வாழ்க்கையில் நடுக்கமா வாங்க ஆந்திரா கடப்பா மாவட்டம் ராயசோட்டியில் உள்ள வீரபத்திரர் சன்னதிக்கு... எல்லாமே பறந்தோடும்.'வீரம்'என்பதற்கு “அழகு” என்றும், 'பத்திரம்'என்பதற்கு “காப்பவன்” எனவும் பொருள். அழகை காப்பவன் என்னும் பெயரில் அமைந்த வீரபத்திரர் வழிபாடு சிறப்பு மிக்கது. பல சிவன் கோயில்களில் இவருக்கு தனிச்சன்னதிகள் உள்ளன. ஆந்திராவில் உள்ள ராயசேட்டி என்னுமிடத்தில் வரலாற்று சிறப்பு மிக்க வீரபத்திரருக்கான பெரிய கோயில் உள்ளது. ஒரு சமயம் வீரபத்திரர் தரிசனம் வேண்டி மாண்டவ்ய முனிவர் தவம் இருந்தார். சிவபெருமானை மதிக்காத தட்சனை கொன்ற அவரும் முனிவருக்கு உக்கிரமாகவே காட்சி அளித்தார். முனிவரும் அவரை சாந்தப்படுத்த அம்பாளிடம் வேண்டினார். இருவரும் காட்சி கொடுத்த இடத்தில் கோயில் கொண்டு மக்களுக்கு அருள் செய்ய வேண்டும் என வரம் பெற்றார் முனிவர். இக்கோயிலை இப்பகுதியை ஆண்ட சோழ, பண்டிய, விஜய நகர மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர். இங்கு காலையில் இளமைக்கோலத்திலும் மாலையில் மீசையுடன் வாலிப தோற்றத்திலும் காட்சி தருகிறார். இத்தல வீரபத்திரருக்கு 'ராஜராயுடு' (அனைவருக்கும் தலைவர்) என்ற சிறப்பு பெயருண்டு. பெருமாள் கோயிலை போன்றே இங்கு இவருடைய பாதம் பொறித்த சடாரி சேவை செய்யப்படுகிறது. வெற்றிலை முக்கிய பிரசாதம். மாசி மாதம் நடைபெறும் பிரமோற்ஸவ எட்டாம் நாளில் நடைபெறும் அன்னக்கிளறல், நெற்றிக்கண் திறத்தல் நிகழ்ச்சி பிரபல்யம். இவ்விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்பவருக்கு குழப்பம் நீங்கும். குடும்பத்தில் நிம்மதியும் உண்டாகும். சித்தி விநாயகர், காலபைரவர், எல்லம்மன், சண்முகர், இரட்டைலிங்கம், நவக்கிரக சன்னதிகளும் உள்ளன. தீர்த்தம் மாண்டவ்ய தீர்த்தம். தலமரம் வில்வம். எப்படி செல்வது: சித்துாரில் இருந்து 110 கி.மீ., விசேஷ நாள்: பிரதோஷம் திருக்கார்த்திகை, தை செவ்வாய் மாசி பிரமோற்ஸவம். நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 98854 79428, 94410 12682அருகிலுள்ள தலம்: திருப்பதி பெருமாள் கோயில் 112 கி.மீ., நேரம்: அதிகாலை 4:00 மணி - இரவு 11:00 மணி