உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் /  தீராத பஞ்சாப் பஞ்சாயத்து!

 தீராத பஞ்சாப் பஞ்சாயத்து!

'கோஷ்டி பூசலை தீர்க்க வந்தவருக்கே இந்த நிலையா...?' என, சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாகேல் குறித்து பரிதாபப்படுகின்றனர், அந்த கட்சியின் நிர்வாகிகள். பஞ்சாபில், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், ஆட்சியை பிடிப்பதற்காக, காங்., பஞ்சாப் மாநில பொறுப்பாளராக பாகேலை, அக்கட்சி மேலிடம் நியமித்தது. அவரும், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநிலம் முழுதும் சுற்றுப் பயணம் செய்து, தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து, உற்சாகப்படுத்தி வந்தார். ஆனாலும், முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி மற்றும் காங்., பஞ்சாப் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வாரிங் ஆகியோரிடையேயான கோஷ்டி பூசல், பெரும் பிரச்னையாக இருந்தது. இரு தரப்பினரையும் அழைத்து, அடிக்கடி ஆலோசனை நடத்தினார் பாகேல். ஒரு கட்டத்தில், இரண்டு தரப்பினருமே பாகேலுக்கு எதிராக திரும்பி, அவரை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, பஞ்சாப் மாநில பொறுப்பாளர் பதவியில் இருந்து பூபேஷ் பாகேலை துாக்கி விட்டு, சச்சின் பைலட்டை நியமித்தது காங்கிரஸ் மேலிடம். 'பஞ்சாயத்தை தீர்க்க வந்தவரை, பஞ்சாபை விட்டே விரட்டி விட்டனரே... பஞ்சாப் பஞ்சாயத்து தீரவே தீராதா...?' என, வருத்தப்படுகின்றனர் பாகேலின் விசுவாசிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !