| ADDED : செப் 06, 2026 01:28 AM
'ஆளாளுக்கு பேசினால், அப்புறம் நான் எதற்கு முதல்வர் பதவியில் இருக்க வேண்டும்...?' என வருத்தப் படுகிறார், கர்நாடக மாநில அரசின் காங்கிரஸ் முதல்வர் சிவகுமார். நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களை விட, கர்நாடகாவில் உள்ளவர்களுக்கு, தங்கள் தாய்மொழியான கன்னடம் மீது அதிக பாசம் உண்டு. 'கர்நாடகாவில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தங்கள் பெயர் பலகைகளில், 60 சதவீதம் இடத்தை கன்னட மொழிக்கு ஒதுக்க வேண்டும்...' என, ஏற்கனவே கர்நாடக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடக கலாசாரத் துறை அமைச்சரான சிவராஜ் தங்கடகி என்பவர், 'கர்நாடகாவில் செயல்படும் அனைத்து வங்கிகளும், கன்னட மொழி தெரிந்தவர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்த வேண்டும். கன்னடம் மட்டுமே தெரிந்த வாடிக்கையாளர்களிடம், வங்கி ஊழியர்கள் ஆங்கிலத்திலோ, ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலோ பேசக்கூடாது...' என, சமீபத்தில் அதிரடியாக அறிவித்தார். கர்நாடகாவில் வசிக்கும் பிற மாநிலத்தினர், இது குறித்து தங்கள் கவலையை வெளிப்படுத்தி உள்ளனர். 'கன்னடத்தை ஊக்குவிப்பது சரி தான். ஆனால் அந்த நடவடிக்கை, பிற மொழி பேசுபவர்களின் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது...' என, அவர்கள் தெரிவித்துள்ளனர். முதல்வர் சிவகுமாரோ, 'மறுபடியும் மொழி பிரச்னையை கையில் எடுத்து, போராட்டங்களை துவங்கினால், மாநிலத்தின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படுமே; இந்த பிரச்னைக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது...?' என புலம்புகிறார்.