உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தினமலர் பவள விழா / தொடரட்டும் வெற்றிப்பயணம்

தொடரட்டும் வெற்றிப்பயணம்

தமிழகத்தின் முதன்மை நாளிதழ்களில் ஒன்றான 'தினமலர்', 75 ஆண்டு காலமாக அச்சு ஊடக உலகில் வெற்றித் தடம் பதித்துப் பயணித்துக் கொண்டிருப்பதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன். பொதுவாக ஊடகங்கள் தலைநகர் சென்னையிலிருந்து இயங்குவதுதான் இயல்பு. ஆனால் 1951ஆம் ஆண்டு இந்தியாவின் தென்கோடியான திருவனந்தபுரத்தில் துவங்கப்பட்ட தினமலர் நாளிதழ், படிப்படியாக தமிழகத்தின் முதன்மை நகரங்களில் கிளைபரப்பி ஒட்டுமொத்த தமிழக வாசகர்களின் மனதைக் கவர்ந்து வருவதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். காலத்திற்குத் தக்கவாறு ஊடகங்களின் தன்மை மாறினாலும் நாளிதழ்களைப் புரட்டுதல் என்பது ஒரு உணர்வு பூர்வமான அனுபவம் ஆகும். அன்றாடச் செய்திகள் மட்டுமல்லாது குடும்பத்தினர் அனைவருக்குமான தேடல்களை உணர்ந்து அவர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு பல்வேறு வடிவங்களில் பகுதிகள் மற்றும் இணைப்புகள் மூலம் வழங்கி தனித்துவம் காக்கிறது தினமலர். தொழில்நுட்ப மாற்றத்தை உள்வாங்கும் ஒரு முன்னோடி ஊடகமாக இணையம், கைபேசி மற்றும் சமூக ஊடக வழியிலும் தனது செய்திப்பணியை துவங்கி காலத்திற்குத் தக்கவாறு தன்னை தகவமைத்துக் கொண்டுவருவதை பாராட்டவேண்டும். குறிப்பாக மாணவர்களின் வழிகாட்டும் திசையாக 'தினமலர்' நாளிதழ் விளங்குவது சிறப்பான விஷயம். அதேபோல் வட்டாரம் சார்ந்த சமூக, மற்றும் பண்பாட்டு விழாக்கள் மட்டுமல்லாது மக்களின் பிரச்னைகளை மையப்படுத்துவதையும் கடமையாகக் கொண்டுள்ளது. ஊடகப்பணி என்பது சவால்கள் நிறைந்தது. பல்வேறு தளங்களிலிருந்து விமர்சனங்கள் மற்றும் அழுத்தங்கள் வந்தாலும் தொடர்ந்து ஊடகப் பணியில் நிலைத்து நின்றவாறு ஒரு நெடிய பயணத்தை மேற்கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. தினமலரின் 75 ஆண்டுகால வெற்றிப் பயணத்தில் பங்கேற்கும் அதன் நிர்வாகிகள், செய்தி ஆசிரியர்கள், செய்தியாளர்கள், ஊழியர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்புடன் பி சத்தியநாராயணன் நிறுவனர், 'புதிய தலைமுறை' ஊடக குழுமம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை