உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி /  தேக்கடி வரை சென்ற தமிழக அரசு பஸ் - * தினமலர் செய்தி எதிரொலி

 தேக்கடி வரை சென்ற தமிழக அரசு பஸ் - * தினமலர் செய்தி எதிரொலி

கூடலுார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால் தமிழக அரசு பஸ் தேக்கடி வரை சென்று திரும்பியது. கேரளாவில் உள்ள சுற்றுலாத் தலமான தேக்கடிக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். குமுளியில் இருந்து 4 கி.மீ., துாரம் உள்ள தேக்கடிக்கு பெரியாறு புலிகள் சரணாலயத்திற்கு சொந்தமான வாகனங்களில் மட்டுமே டிக்கெட் எடுத்துச் செல்ல வேண்டும். மற்ற வாகனங்கள் தேக்கடிக்குச் செல்ல அனுமதி இல்லை. சுற்றுலா பயணிகள் வசதிக்காக மதுரையில் இருந்து தேக்கடிக்கு 2 தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர கம்பத்தில் இருந்து 2 டவுன் பஸ்களும் உள்ளன. டவுன் பஸ்கள் எவ்வித காரணமும் இன்றி பல மாதங்களாக தேக்கடி வரை இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டன. தற்போது மதுரையில் இருந்து தேக்கடிக்கு காலை 10:30 மணிக்கும், மாலை 4:15 மணிக்கும் சேரும் வகையில் இரண்டு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் தேக்கடி வரை செல்லாமல் இடையிலேயே திரும்பி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தன. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து தேக்கடி படகு நிறுத்தப் பகுதி வரை சென்று திரும்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். டிரைவர்கள் கூறியதாவது: தேக்கடி வரை சென்று பயணிகள் இறக்கிவிடப்பட்ட பின், தேக்கடியில் இருந்து தமிழகப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் தமிழக அரசு பஸ்சில் ஏற கேரள வனத்துறையினர் அனுமதி மறுக்கின்றனர். பெரியாறு புலிகள் சரணாலயத்திற்கு சொந்தமான வாகனத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என, கெடுபிடி செய்கின்றனர். இரு மாநில அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி தேக்கடியில் இருந்து தமிழகப் பகுதிக்கு வரும் பயணிகளை ஏற்ற அனுமதிக்க வேண்டும்., என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை