ஆனைமலை:ஆனைமலை அருகே, அரசு உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர், படித்த பள்ளியை அழகாக்கும் வகையில், ஓவியம் வரைந்து வருகிறார்.ஆனைமலை அருகே பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயின்றவர் மாணவர் மணிகண்டன். இவர், தற்போது நடந்த, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 367 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று மேல்நிலைக்கல்விக்காக வேறு பள்ளிக்குச் செல்ல உள்ளார்.இந்நிலையில், பயின்ற பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், தன்னிடம் உள்ள ஓவியத்திறனை வெளிப்படுத்தும் வகையில், ஏதாவது செய்யலாமா என பள்ளி தலைமையாசிரியரிடம் அனுமதி கேட்டார்.தலைமையாசிரியர் மற்றும் பள்ளியின் தமிழாசிரியர் ஆகியோரின் வழிகாட்டுதல்படி, பள்ளியின் வளாகச்சுவரில் அழகான இயற்கை ஓவியங்களை வரையும் பணி மேற்கொண்டார்.தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், நேற்றுமுன்தினம் முதல், பள்ளியின் வளாக சுவர்களில், வனவிலங்குகள் உள்ளிட்ட கண்கவர் ஓவியங்களை வரையும் பணியை மாணவர் செய்து வருகிறார்.ஓவியம் வரைய தேவைப்படும் பொருட்களை, ஆசிரியர்கள் வாங்கித்தருவதாக கூறிய போதும், அதை மறுத்து தனது, 'பாக்கெட்மணி' யில் இருந்தே வாங்கி ஓவியங்களை வரைந்து வருகிறார்.தமிழாசிரியர் பாலமுருகன் கூறியதாவது:மாணவர் மணிகண்டன், ஓவியம் வரைவதில் மிகவும் திறமை வாய்ந்தவர். ஓவியப்போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகள் பெற்று, பள்ளிக்குப்பெருமை சேர்த்தவர்.இக்காலகட்டத்தில் பத்தாம்வகுப்பு முடித்துவிட்டு பள்ளியை விட்டுச் செல்லும் மாணவர்கள் பள்ளியின் பொருட்களைச் சேதப்படுத்தி விட்டு செல்லும் சூழலே நிலவுகிறது.ஆனால், எங்கள் மாணவர் பள்ளியை விட்டுச்செல்கையில் அதை மேலும் அழகாக்கிச் செல்வது என்பதில் எங்களின் கற்பித்தல் வெற்றி பெற்றுள்ளது. கற்றலோடு இங்கு ஒழுக்கமும் உயர்ந்து நிற்கின்றது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.மாணவன் மணிகண்டன் கூறுகையில், ''பள்ளியின் நுழைவாயிலை அடையும்போதே, பள்ளி குறித்த நல் எண்ணங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனதில் ஏற்படவேண்டும் என்ற எண்ணத்தில்தான் பள்ளியின் நுழைவாயிலில் இந்த அழகான ஓவியங்களை வரைகின்றேன்.எனக்கு எல்லாமும் கற்றுக்கொடுத்த எனது பள்ளிக்கு என்னால் முடிந்த சிறுமுயற்சி. இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த எனது பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்,'' என்றார்.