உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / ஏழை மாணவர்களை காக்க வேண்டும்!

ஏழை மாணவர்களை காக்க வேண்டும்!

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி,கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய'இ - மெயில்' கடிதம்: மருத்துவக் கல்லுாரிகளில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, முன்னாள் முதல்வர் பழனிசாமியால் கொண்டு வரப்பட்டது. அதன்பின், முதல்வர் ஸ்டாலின், 'அரசுப் பள்ளிகளில் படித்து பொறியியல் கல்லுாரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் சேரும் மாணவர்களுடைய கல்விக்கான அனைத்துக் கட்டணங்களையும் அரசே வழங்கும்' என, கடந்த நவ., 2021ல்அதிரடியாக அறிவித்தார். இதனால், அரசுப் பள்ளிகளில் படித்த பல ஆயிரம் ஏழை மாணவர்கள், கடந்த 2021 முதல், ஒவ்வொரு ஆண்டும் புகழ் பெற்ற தனியார் பொறியியல் கல்லுாரிகளில் இடம் கிடைத்து படிக்கின்றனர். இந்த ஆண்டு, அதே இட ஒதுக்கீட்டின்கீழ் சேர்ந்த மாணவர்களிடம் சில பொறியியல் கல்லுாரிகள் அரசின் விதிமீறி, சில கட்டணங்களை வசூலிப்பதாகபுகார்கள் எழுந்தன. தமிழக உயர்கல்வித் துறைக்கு பல புகார்கள் பெறப்பட்ட நிலையில், தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்கம் கடந்த, ஆக., 17ல், 'தனியார் பொறியியல் கல்லுாரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எந்தவொரு கட்டணமும் வசூல் செய்யக்கூடாது' என, மீண்டும் அறிவிப்பு வெளியிட்டது. ஒவ்வொரு பொறியியல் கல்லுாரியும், இந்த செய்தி வெளியீட்டு நகலை, அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்க வேண்டும். அதையும் மீறி கட்டணம் வசூலித்தால், மாணவர்கள் புகார் கொடுக்க வேண்டிய முகவரியான, 'தொழில்நுட்பக் கல்வி ஆணையர், தொழில்நுட்பக் கல்வி இயக்கம், 53, சர்தார் வல்லபபாய் படேல் ரோடு, அண்ணா பல்கலை, கிண்டி, சென்னை - 600023' என்ற முகவரியை, அதன் தொலைபேசி எண்களுடன் எழுதி வைக்க வேண்டும். இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு திட்டம், இந்திய அளவில் மிகவும் வரவேற்கத்தக்கதாக உள்ளது. தமிழக உயர் கல்வித் துறை மிகவும் கண்டிப்புடன் இந்த திட்டத்தை கண்காணித்து, ஏழை மாணவர்களின் கல்வியை காக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்!

இலங்கையும், வங்கதேசமும்!

பி.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: வங்கதேசத்தின் புதிய இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றுள்ளார். சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்ற யூனுஸ், வங்கதேசத்தில் 'ஏழைகளின் வங்கியாளர்' என்று அழைக்கப்படுகிறார்.இரு நாடுகளின் உறவை மேம்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக, வங்கதேசத்தின் இடைக்கால அரசு அறிவித்திருக்கிறது.முகமது யூனுஸ் பதவியேற்றதும், அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, 'விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்று நம்புகிறோம். இது இந்துக்கள் மற்றும் எல்லா சிறுபான்மை சமூகங்களின்பாதுகாப்பையும் உறுதி செய்யும்' என்று கூறி உள்ளார்.வங்கதேசத்தில், ஹசீனாவை வெளியேற்ற நடந்த வன்முறையை சிலர், இலங்கையில் நடந்த போராட்டத்துடன் ஒப்பிடுகின்றனர். வித்தியாசத்தைப் பார்ப்போம்... போராட்டக்காரர்களால் சில அரசியல் தலைவர்களின் சொத்துக்கள்தான், இலங்கையில்சூறையாடப்பட்டன;வங்கதேசத்தில், ஹிந்து மதத்தைச் சேர்ந்த பொதுமக்களின்சொத்துக்களும் சூறையாடப்பட்டிருப்பது தான் அவலம்  கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியஇலங்கையில், அனைத்து பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்தன; வங்கதேசத்தில் அப்படிப்பட்ட நிகழ்வு இல்லை. வேலை இல்லாதோர் எண்ணிக்கை மட்டும் உயர்ந்து வருகிறது இலங்கையில் ஏற்பட்டபுரட்சி, மதங்களை கடந்து, நிலையான பொருளாதாரத்திற்கு அரசியல் மாற்றம் தேவை என்றது; வங்கதேசத்தில் சுதந்திரத்திற்கு பாடுபட்ட குடும்பத்தினர், சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள், பெண்களுக்கு 10 சதவிகிதம், மாற்றுத்திறனாளிகள் மற்றும்சிறுபான்மையினர்என, மொத்த இடஒதுக்கீடு 56 சதவீதம்என்பதைக் கடந்ததால், வன்முறை துாண்டப்பட்டு இருக்கிறது இலங்கையில் பொதுமக்கள், மாற்று அரசியலைக் கொண்டு வந்து, போராட்டத்தைக் கை விட்டதால், தேவையான உதவிகளைச் செய்ய நமக்கு ஏதுவாக இருந்தது; ஆனால் வங்கதேசத்தில் ஏற்பட்டிருக்கும் தற்காலிக அமைப்புகள், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், மற்ற நாடுகளின் உதவியை எதிர்பார்க்க முடியாது இலங்கையில் ஏற்பட்டபுரட்சி, அந்நாட்டு மக்கள் கொதித்து எழுந்ததால் வந்தது;வங்கதேசத்தில், அன்னிய சக்திகளின்ஊடுருவல் அப்பட்டமாகத் தெரிகிறது. இத்தருணத்தில், நம் பிரதமர் மோடி, ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியிருப்பதை பாராட்ட வேண்டும். 

- கருத் து சுதந்திரத்திற்கு கட்டுப்பாடு தேவை!

வெ. சீனிவாசன், திருச்சியில்இருந்து அனுப்பிய 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் வந்துள்ள ஒரு திரைப்படத்தின் கதாநாயகி, கிராமத்தில் ஹிந்தி கற்றுத் தரும் சபா இருக்கக்கூடாது என்று போராடி, அதற்கு பூட்டு போடுகிறாராம்; ஹிந்தி திணிப்புக்கு எதிராகவும் போராடுகிறாராம். தெரியாத மொழியைக் கற்றுக் கொள்வது என்பதுமக்களின் தனிப்பட்ட விருப்பம். விருப்பமுள்ளவர்கள் கற்றுக் கொள்ளலாம். அதற்கு இடையூறுகள் செய்வது, பிறர் உரிமைகளில் மூக்கை நுழைக்கும் எதிர்மறையான செயல்பாடுகள். இவை தவிர்க்கப்பட வேண்டியவை. ஒரு சில குறிப்பிட்ட மொழிகள் மீது, பிற மொழி பேசுபவர்கள் வெறுப்பை உமிழ்வது, அவர்களுக்கு எதிராக படம் பார்ப்போரை துாண்டி விடுவது போன்ற தரம் தாழ்ந்த செயல்பாடுகள், இந்த நவீன யுகத்தில் ஏற்புடையதல்ல. இனம், மதம், மொழியை வைத்து அரசியல் செய்யப்படுகிறது. தற்போது, அவை திரைப்படங்களிலும் நுழைந்து விட்டது. இத்தகைய செயல்பாடுகள், மக்களிடையே நாம் அனைவரும் இந்தியர் என்பதை மறந்து, பிரிவினைவாத கருத்துக்களை பரப்பக்கூடும். இந்த திரைப்படம் சரியாக ஓடவில்லை; வசூலும் குறைவே என்று கூறப்படுகிறது. இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்... மக்கள் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஆதரிக்கவில்லை என்பதை! திரைப்படங்களை உருவாக்குவோர், சமூக பொறுப்பை உணர்ந்து, தங்கள் படைப்புகளை வெளியிட வேண்டும். தணிக்கை துறையினரும் கவனத்துடன் செயல்பட வேண்டும். கருத்து சுதந்திரம் என்ற போர்வையில், தேசத்திற்கு எதிரான கருத்துகளை பரப்புவதற்கு அனுமதிக்கக் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D.Ambujavalli
ஆக 21, 2024 17:02

இதே போல 'தமிழ், தெலுங்கு ' போன்ற மொழிகளை ஒழிக்கும் இந்திப்படம் வந்தால் இவர்கள் சும்மா இருப்பார்களா ? ஹிந்தி தெரியாது, அமைச்சர் அங்கு போய் 'அச்சா, அச்சா ' என்று புரியாமல் நின்றுவிட்டு வந்ததுபோல் சாமானியன் அங்கு குப்பை கொட்ட முடியுமா ?


Barakat Ali
ஆக 21, 2024 08:39

பீப் இறைச்சி பிரச்னை ஆனபோது என் உணவு என் உரிமை என்றோம் .... ஹிந்தி போன்றதே உருதுவும் .... ஆனால் ஆரிய ஹிந்தியை திராவிடத்துடன் சேர்ந்து எதிர்ப்போம் ..... பல மொழிகள் கற்பது எங்கள் உரிமை ன்னு தமிழன் விழிப்புணர்வு அடையக்கூடாது ....


chennai sivakumar
ஆக 21, 2024 05:34

சென்சார் போர்டு தூங்கி கொண்டு இருந்தார்களா??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை