ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி அறிக்கை : ஊழலை எதிர்த்து போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவை கைது செய்தது, உலக அளவில் இந்தியாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்னா ஹசாரேயை, உடனே விடுதலை செய்வதுடன், அவருக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும். இல்லாவிட்டால், கோர்ட்டில் வழக்கு தொடர்வேன்.
இ.கம்யூ., தேசிய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் நல்லகண்ணு பேட்டி: விஸ்வரூபம் எடுத்துள்ள ஊழலை தடுக்க, மத்திய அரசுக்கு உண்மையான அக்கறை இல்லை. அறவழியில் போராட்டம் நடத்தினால், அது சட்ட விரோதம் என, மத்திய அரசு தடுக்கிறது. இது, காங்கிரசின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது.
இ.கம்யூ., எம்.பி., குருதாஸ் தாஸ் குப்தா பேட்டி : அன்னா ஹசாரே கைது, ஜனநாயக விரோதமானது. அடிப்படை மனித உரிமையை மீறும் செயல். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பார்லிமென்டின் இரு அவைகளையும், மூன்று நாட்களுக்கு புறக்கணிக்க, எதிர்க்கட்சிகள் முன்வர வேண்டும்.
முன்னாள் எம்.பி.,யும் தற்போதைய காங்கிரஸ் பிரமுகருமான முருகேஷ் வெளியிட்ட அறிக்கை : சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.,யில், உயர் பதவிகளுக்கு, கடந்த, 25 ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் சமூகத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை. இலங்கைத் தமிழர்கள் பிரச்னைக்காக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசை வலியுறுத்தும் தமிழக அரசு, சமூக நீதிக்காகவும் சட்டசபையில் குரல் கொடுக்க முன் வரவேண்டும்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேச்சு : தண்டனைகள் எப்போதும் திருந்தி வாழ்வதற்கான அடிப்படையாக இருக்க வேண்டுமே தவிர, மனிதனை சாவுக்கு தள்ளக்கூடாது. மனிதன் செய்யும் தவறுக்கு, சட்டம் தூக்கு தந்தால், சட்டம் செய்யும் தவறுக்கு யார் தண்டனை தருவது. செய்யாத தவறுக்கு, தூக்கில் இறந்தவர்களுக்கு நிறைய உதாரணங்கள் உண்டு. அப்படியானால், சட்டமே தவறு செய்திருக்கிறது என்று தானே அர்த்தம்.
முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பேட்டி : தொடர்ந்து கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வந்ததில், எங்கள் கட்சியின் அடிமட்ட அமைப்பு பலவீனமாகிவிட்டது. எங்களைப் பொறுத்தவரை, தி.மு.க., - அ.தி.மு.க., இரண்டும் ஒன்று தான். தலைமை தான் வித்தியாசம். நாங்கள் ஜெயித்திருந்தாலும், இதே முடிவைத்தான் எடுத்திருப்போம்.