உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / மின் இணைப்பு, பெயர் மாற்றத்துக்கு கறார் வசூல்!

மின் இணைப்பு, பெயர் மாற்றத்துக்கு கறார் வசூல்!

நாளிதழை மடித்தபடியே, ''நிறைய பைல்கள் தேங்கி கிடக்கறது ஓய்...'' என, அரட்டை கச்சேரியை ஆரம்பித்தார் குப்பண்ணா.''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.''தமிழகத்துக்கு புதிய தொழிற்சாலைகளை கொண்டு வர, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துண்டு இருக்கோல்லியோ... முதலீடுகளை ஈர்க்க, அடுத்த மாசம் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா பயணப்பட இருக்காரே ஓய்...''ஆனாலும், தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கறதுல காலதாமதம் ஏற்படுதுன்னு சொல்றா... குறிப்பா, நிதித்துறையில நிறைய பைல்கள் தேங்கி கிடக்கறது ஓய்...''முதல்வர் ஓகே பண்ணி அனுப்பிய பைல்களுக்கே நிதித்துறையில ஒப்புதல் அளிக்க லேட் பண்றாளாம்... இதனால, முதலீட்டாளர்கள் பலரும் அதிருப்தியில இருக்கா... 'இதுல, முதல்வர் தலையிடணும்'னு புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''வீட்டுக்காரர் யாருன்னு மண்டையை பிய்ச்சிட்டு இருக்காங்க...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார்அந்தோணிசாமி.''ஏதோ வில்லங்க விவகாரமா தெரியுதே... விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.''ஈரோட்டுல இருக்கிற ஒரு பெண் போலீஸ் அதிகாரி, ஆயுதப்படை வளாக குடியிருப்புல வீடு எடுத்து தனியா தங்கியிருக்காங்க... இவங்க வீட்டு கதவை, போன வாரம் மதிய நேரத்துல, மர்ம நபர் ஒருத்தர், வெளிப்புறமா பூட்டிட்டு ஓடிட்டாருங்க...''அப்ப, வீட்டுக்குள்ள நாமக்கல்லை சேர்ந்த ஜோதிடர் ஒருத்தர், பெண் அதிகாரியுடன் இருந்திருக்காரு... அப்புறமா, லோக்கல் போலீசார் வந்து பூட்டை உடைச்சு ரெண்டு பேரையும் மீட்டிருக்காங்க...''பெண் போலீஸ் அதிகாரி, ஜோதிடரை தன் கணவர்னு சொல்லியிருக்காங்க... ஆனா, அவங்க, 'பேஸ்புக் ஸ்டேட்டஸ்'ல இருக்கிற கணவரின் முகத்துக்கும், ஜோதிடர் முகத்துக்கும் சம்பந்தமே இல்லைங்க...இதனால, பெண் அதிகாரியின் கணவர் யார்னு, போலீசார் குழம்பிட்டு இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.''பணத்தை வெட்டுனா தான், மின் இணைப்பு தர்றாவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...''செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி மேற்கு மின்வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளரா ஒரு ஆணும், உதவியாளரா ஒரு பெண்ணும் பணியில இருக்காவ வே...''இந்த ஏரியா பொதுமக்கள் புதிய மின் இணைப்பு மற்றும் பெயர் மாற்றம் வேண்டி, உரிய ஆவணங்களுடன், 'ஆன்லைன்' வழியா விண்ணப்பிக்காவ... ஆனாலும், அவங்களுக்கு காரியம் நடக்க மாட்டேங்கு வே...''காரணம் கேட்டு போனா, 'புதிய இணைப்புக்கு 20,000 ரூபாயும், பெயர் மாற்றத்திற்கு 10,000 ரூபாயும் குடுத்தா தான் ஆச்சு'ன்னு இருவர் அணியும் கறாரா பேசி வசூல் பண்ணிட்டு தான் விண்ணப்பத்தை, 'ஓகே' பண்ணுதாவ...''ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருத்தர், பெயர் மாற்றத்துக்கு அப்ளை பண்ணி, லஞ்சம் தர மறுத்துட்டதால, அவரது விண்ணப்பத்தையே, 'ரிஜக்ட்' பண்ணிட்டாவ... அப்புறமா அவரது மகன், மறுபடியும் விண்ணப்பிச்சு, இருவர் அணி கேட்ட பணத்தை குடுத்து, பெயர் மாற்றம் பண்ணியிருக்காரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.அப்போது பெஞ்சில் அமர்ந்த ஒருவர், 'என் மகள் சசிக்கு நாளைக்கு பிறந்த நாள்... 'ஆசீர்வாதம்' பண்ண நீங்க அவசியம் வரணும்...' என உரத்த குரலில் பேச, பெரியவர்கள் சத்தமின்றி கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

a.u chandrasekaran
ஜூலை 28, 2024 16:05

It seems most of the medias are exploiting the news. further the people should aware of it and they should not encourage this type of activities the punishment also severe no more enquiry simply dis miss the concerned person.


Raghu Nathan
ஜூலை 28, 2024 09:27

நான் சொத்து மேலாண்மை சேவை செய்கிறேன். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் TANGEDCO பெயர் மாற்றத்திற்காக கோடம்பாக்கம் மின் உற்பத்தி நிலையம், சிவன் பூங்கா அலுவலகம், குரோம்பேட்டை அலுவலகம், பல்லாவரம் அலுவலகம் மற்றும் ஓட்டெரி புரசை ஆகிய அனைத்து அலுவலகங்களிலும் நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை, ஆன்லைன் விண்ணப்பத்திற்குப் பிறகு ஒரு வாரம் காத்திருங்கள், லஞ்சம் இல்லாமல் ஒப்புதல் பெறுகிறது, அல்லது மிகக் குறைந்த தொகையுடன் ரூ. 500 முதல் 1000 வரை. போரூர், பிரெஸ்டீஜ் காம்ப்ளக்ஸ் அலுவலகம், எல். டி. க்கு, குடியிருப்பு இணைப்பு, லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை எந்த நிலையான லஞ்ச விகிதமும் இல்லை கூடுவாஞ்சேரி மேற்கில், நீங்கள் உதவி பொறியாளரை சந்திக்க முடியாத இடத்தில், ஊழியர்கள் மோதி, லஞ்ச விகிதங்களை நிர்ணயிக்கிறார்கள். வெளியான செய்தி 200% உண்மை. மிக மோசமான அலுவலகம் மற்றும் துறையின் பெயரைக் கெடுக்கிறது.


D.Ambujavalli
ஜூலை 27, 2024 17:36

ஆக இதிலிருந்து தெரிவது. எந்தத் துறையிலும் எல்லாருமே கருப்பு ஆடுகள் இல்லை என்பதுதான் ஆன் லைனில் apply செய்தாலும் எங்களை ஏமாற்றி இணைப்பு/ மாற்றம் வாங்கிவிடுவாயா என்று கோலத்திலும் நுழைபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்


Raghavan
ஜூலை 27, 2024 17:36

என் பையன் வீட்டு இணைப்புக்கு பெயர் மாற்ற ஆன் லைன் மூலம் விண்ணப்பித்து ரூபா 725 ஆன்லைன் மூலம் செலுத்தி இரண்டே நாள்களில் வேளச்சேரி ஆபீஸில் மாற்றிக்கொடுத்துவிட்டார்கள்.


கனோஜ் ஆங்ரே
ஜூலை 27, 2024 15:33

இங்கே கருத்து சொன்ன... ஆன்லைனில் பதிவு செய்த 3 பேரில், இரண்டு பேர் சரியாக, நேர்மையாக நடந்ததாக சொல்லியுள்ளனர். ஒருத்தர், மும்முனை இணைப்பு கிடைக்கவில்லை என்கிறார்... இதில்... தவறு அரசின் தவறு அல்ல... அதிகாரியின் தவறு... “எந்த குழந்தையும் நல்லக்குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவன் நல்லவனாவதும், தீயவராவது அன்னை வளர்ப்பதிலே”...ன்னும்... திருடெனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது..ன்னும் சொல்வாங்க... எந்த ஆட்சி வந்தாலும், இந்த அதிகாரிகள் திருடராய் இருந்து செய்யும் தவறுகள்... ஆட்சியாளரைத்தான் போய்ச் சேரும்....


Raghu Nathan
ஜூலை 28, 2024 09:32

Exactly, in TANGEDCO and Chennai corporation property tax, bribing depends on the office inges. Most of the Chennai City offices, routine public services not much bribing. Outer skirt like this Guduvanchery west, the situation is worst. The news is 200% fact.


K.n. Dhasarathan
ஜூலை 27, 2024 13:44

எனது வீட்டு மின் இணைப்புக்கு பெயர் மாற்றம் வேண்டி விண்ணப்பித்தேன், ஆன் லைனில் பணம் காட்டினேன்725 ரூபாய், ஒரு வாரத்தில் தகவல் வந்தது, சரி பார்த்தேன், பில்லில் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினேன், இடம்: தேனீ மாவட்டம், கெங்குவார்பட்டி, சரியாகத்தான் நடக்கிறது.


enkeyem
ஜூலை 27, 2024 10:16

எனது வீட்டிற்கு பிரதமரின் சோலார் பேனல் அமைக்க மின் பளு 1 கே வி யிலிருந்து 3 கே விக்கு மாற்ற ஆன் லைனில் விண்ணப்பிக்க அதற்கு மும்முனை மின் இணைப்புக்கு விண்ணப்பிக்க கோரினர். அதன்படிவிண்ணப்பத்தை திருத்தம் சித்து விண்ணப்பிக்க அதற்கான கட்டணம் செலுத்த டிமாண்ட் நோட்டீஸ் அனுப்பினார். 7- 6- 2024 அன்று அதற்கான தொகையை ஆன்லைனில் செலுத்தப்பட்டு விட்டது. கட்டணம் செலுத்தி இன்றுடன் 50 நாட்கள் கடந்தும் மும்முனை மிசார இணைப்பு வழங்கப்படாமல் மின் வாரியம் இழுத்தடிக்கிறது.


B N VISWANATHAN
ஜூலை 27, 2024 07:34

15 நாட்களுக்கு முன் பெயர் மாற்றம் ஆன்லைன் மூலம் Rs 725 செலுத்தி அப்ளை செய்தேன். அடுத்த 48 மணி நேரத்துக்கும் முன்பே பெயர் மாற்றம் செய்த தகவல் சம்ஸ் மூலம் வந்தது. நன்றி KK நகர் பிரிவு


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை