உள்ளூர் செய்திகள்

நினைவை தாங்கும் மரம்!

சென்னை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1987ல், 8ம் வகுப்பு படித்த போது, நடந்த நிகழ்வு!எங்கள் வகுப்புக்கு, புதிய ஆசிரியர் வந்தார்; புரியும்படி எளிமையாக பாடம் நடத்துவார். மாணவியரின் பிறந்த நாள் விவரத்தை வாங்கியவர், 'வாழ்கைக்கு உதவும் பரிசு ஒன்றை, உங்கள் பிறந்த நாளன்று தருகிறேன்...' என்றார். எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். என் பிறந்த நாள் அன்று, அவருக்கு இனிப்பு கொடுக்க சென்றேன். ஒரு வேப்ப மரக்கன்றை பரிசாக தந்தவர், 'தோட்டத்தில் நட்டு வை; இந்த மரம் செழிப்பாக வளர்வது போல், உன் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்...' என்று வாழ்த்தினார். அதை நட்டு பராமரித்து வருகிறேன். 32 ஆண்டுகள் ஓடிவிட்டன. அந்த ஆசிரியர் தற்போது இல்லை. ஆனால், மரம் வளர்ந்து பிரமாண்டமாக நிழல் தருகிறது. அதன் பலனை, பலரும் அனுபவிக்கின்றனர். சென்னையில் வீசிய வர்தா புயலில், பல மரங்கள் வேரோடு சாய்ந்தன; ஆனால், அந்த வேப்ப மரம், அந்த ஆசிரியர் நினைவுகளை தாங்கி பசுமையாக நிற்கிறது. - பி.இந்துமதி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !