உள்ளூர் செய்திகள்

தவறும் கண்டிப்பும்!

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் இந்து மத பாடசாலையில், 1954ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்தபோது தலைமை ஆசிரியராக இருந்தார் ராஜகோபாலாச்சாரி. எங்களுக்கு கணித ஆசிரியராகவும் இருந்தார். தும்பை மலர்போல் வேட்டி, சட்டையுடன், நீண்ட அங்கவஸ்திரம் அணிந்திருப்பார். கணித வகுப்பில், பாட புத்தகத்தை கையில் தொட்டதே இல்லை. பாடங்களை மனதில் பதித்திருந்தார். உச்சி முதல், உள்ளங்கால் வரை கணிதத்தால் நிரம்பியிருந்தார். வகுப்பு துவங்கும் முன், இறை வணக்கம் கூட்டம் நடக்கும். அது முடிந்த பின், அன்றைய செய்தியை வாசிப்பர். ஆசிரியர் தொகுத்து தருவதை மாணவர்களில் ஒருவர் வாசிக்க வேண்டும். அன்றைய செய்தியை வாசித்தவன், '60.75 சதவீதம்' என்றிருந்த தகவலை, 'அறுபது புள்ளி எழுபத்தைந்து...' என கூறி விட்டான். அடுத்த நொடி, கண்டிப்புடன் உறுமியபடி பார்த்தார் தலைமை ஆசிரியர். செய்தி தயாரித்திருந்த ஆசிரியர் பதறியபடி ஓடி வந்து, 'அறுபது புள்ளி ஏழு ஐந்து...' என திருத்தியபடி, மன்னிப்பு கேட்கும் பாவனையில் தலை கவிழ்ந்து நின்றார்.எனக்கு, 83 வயதாகிறது; இன்று, 'டிவி'யில் செய்தி வாசிப்பவர்கள், தவறாக உச்சரிப்பதை காணும் போதெல்லாம், அந்த காட்சி மனத்திரையில் வருகிறது.- எம்.ராசாமணி, தேனி.தொடர்புக்கு: 99650 68984


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !