பெருந்தன்மை!
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, விக்னேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில், 1992ல், 9ம் வகுப்பு படித்த போது, ஆண்டு கட்டணம் மற்றும் புத்தக செலவு, 3,000 ரூபாய். அதை தவணை முறையில் செலுத்தலாம்.அரையாண்டு தேர்வு முடிந்ததும், இரண்டாம் தவணை கட்டணம் செலுத்தாதோர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் என் பெயரும் இருந்தது. தந்தையிடம் கூறிய போது, 'விரைவில் செலுத்தி விடலாம்...' என உறுதி அளித்தார்.தாமதம் ஏற்பட்டதால், மூன்று பேரை நினைவூட்டியபடி இருந்தார் வகுப்பாசிரியர். கட்டணம் செலுத்தியோர், புத்தகங்கள் வாங்கியதை அறிந்தேன்.மறுநாள், நினைவூட்டலில் என் பெயரை குறிப்பிடவில்லை. 'தந்தை கட்டணம் செலுத்தியிருப்பார்' என மகிழ்ந்திருந்தேன்.அன்று பாட வகுப்பு முடிந்ததும், 'மதிய உணவு இடைவேளையில், புத்தகங்களை வாங்கி கொள்...' என்றார் வகுப்பாசிரியர். அதன்படி சென்றேன். புத்தகங்களை தந்தவர், 'உன் கட்டணத்தை தலைமை ஆசிரியர் திருமலைசாமி செலுத்தி விட்டார். உன்னை பற்றி விசாரித்தறிந்த பின் எடுத்த நடவடிக்கை இது...' என தெரிவித்தார்.உடனே, தலைமை ஆசிரியரை சந்தித்து நன்றி கூறினேன். அப்போது, 'கட்டணம் முக்கியமில்லை. படிப்பது தான் அவசியம். அடுத்த ஆண்டு, 10ம் வகுப்பு பொது தேர்வு என்பதால் கவனமாக படி; முடிந்தபோது கட்டணத்தை செலுத்தினால் போதும்...' என அறிவுரைத்தார். என் தந்தைக்கு வியாபாரத்தில் ஏற்பட்டிருந்த நஷ்டத்தை விசாரித்து அறிந்து தக்க நேரத்தில் உதவிய, அவரது பெருந்தன்மை கண்டு நெகிழ்ந்தேன்.தற்போது, என் வயது, 41; கோவை, மோட்டார் நிறுவனம் ஒன்றில், மேலாளராக பணிபுரிகிறேன். தக்க நேரத்தில் மனம் உவந்து உதவிய அந்த தலைமை ஆசிரியரை தினமும் வணங்குகிறேன். உடுமலையை சேர்ந்த அவரை சந்திக்க விரும்பி தேடி வருகிறேன்.- என்.சசிகுமார், கோவை.தொடர்புக்கு: 93459 72517