குல்லாய்! (மினிஸ்டோரி!)
ஒரு குல்லா வியாபாரி சந்தைக்குச் சென்று கொண்டிருந்தான். நடுப்பகல் நேரம், மிகவும் களைப்பாக இருந்ததால் ஒரு மரத்தடியில் படுத்துறங்கினான். ஒரு குரங்குக் கூட்டம் அவ்வழியே வந்தது. வெயிலுக்காக குல்லாய்க்கரன் தன் தலையில் ஒரு குல்லா வைத்திருந்தான்.புரண்டு படுத்ததில் மூட்டை அவிழ்ந்து குல்லாய்கள் சிதறியிருந்தன. குரங்குகள் ஆளுக்கொரு குல்லாவைத் தலையில் வைத்துக்கொண்டு மரத்திலேறி விளையாடின.குல்லா வியாபாரி சிறிது நேரத்தில் உறக்கம் தெளிந்து எழுந்தான். மூட்டை அவிழ்ந்து சில குல்லாய்களே இருப்பதைப் பார்த்து திடுக்கிட்டான். ''யார் எடுத்திருப்பார்கள்?'' என்று சுற்றுமுற்றும் பார்த்தான்.'குர், குர்...' என்ற சத்தம் அவனை அண்ணாந்து பார்க்கவைத்தது. மரம் நிறையக் குரங்குகள். எல்லாக் குரங்குகளின் தலையிலும் வண்ணத் தொப்பிகள். அவனுக்கு வந்த ஆத்திரத்துக்கு அளவே இல்லை.''ஏ குரங்கே! தொப்பியைக் கீழே போடு. சந்தைக்கு நேரமாகிறது!'' என்று கத்தினான்.அவையும் பதிலுக்கு, 'உர், உர்...' என்றன. ஒரு கல்லை விட்டெறிந்தான். அவை இலையைப் பிய்த்து எறிந்தன.வியாபாரிக்கு அப்போதுதான் புரிந்தது. குரங்குகள் நாம் என்ன செய்வோமோ அதை அப்படியே திருப்பச் செய்யும் இயல்புடையது. மூட்டைகட்டப் பயன்படுத்திய துணியை சீராக மரத்தின் கீழ் விரித்தான். தன் தலையிலுள்ள தொப்பியை அதில் வீசி எறிந்தான். உடனே எல்லாக் குரங்குகளும் தொப்பியைக் கழற்றி வீசின. வியாபாரி மகிழ்ச்சியுடன் மூட்டையைக் கட்டிக்கொண்டு சந்தைக்குச் சென்றான்.சமயோசிதமாக நடந்துகொண்டால் எப்பேர்பட்ட சிக்கலிலிருந்தும் விடுபடலாம்.